ஹைகோர்ட் கிளை அசத்தல் தீர்ப்பு.. தமிழில் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் டாக்டராக வாய்ப்பு!
உயர்நீதிமன்ற கிளையின் அசத்தல் தீர்ப்பால் தமிழில் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் பலரும் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
Recommended Video
மதுரை: உயர்நீதிமன்ற கிளையின் அசத்தல் தீர்ப்பால் தமிழில் தேர்வு எழுதிய தமிழக மாணவர்கள் பலரும் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர்.
ஆனால் 45,336 பேர் மட்டுமே தகுதி பெற்றனர். நீட் தேர்வு வினாத்தாள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டதே இதற்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.
மாணவிகள் தற்கொலை
நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மற்றும் திருச்சியை சேர்ந்த இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என கடிதமும் எழுதி வைத்திருந்தனர்.
கனவை மாய்த்த பலர்
நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடியால் இரண்டு மாணவிகள் தங்களின் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் பலர் தங்களின் மருத்துவப்படிப்பு கனவை மாய்த்தனர்.
சிபிஎம் வழக்கு
இதையடுத்து மார்க்சிஸ்ட் எம்.பி. ரங்கராஜன் நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் சரியாக மொழிபெயர்ப்பு செய்யப்படாத 49 வினாக்களுக்கு ஒவ்வொன்றுக்கும் 4 மதிப்பெண் என 196 கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என கூறி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
196 மதிப்பெண்கள்
அந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு வினாவுக்கு தலா 4 மதிப்பெண்கள் வீதம் 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதிய ரேங்க் லிஸ்ட்
மேலும் மருத்துவ கலந்தாய்வுக்கு புதிய தரவரிசைப்பட்டியல் வெளியிட்டு மாணவர் சேர்க்கையை தொடங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு தமிழக மாணவர்களும் கல்வியாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
பலருக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 24,000 மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதியுள்ளனர். உயர்நீதிமன்ற கிளையின் இந்த தீர்ப்பால் அனைவருக்கும் தலா 196 மதிப்பெண் கிடைக்கவுள்ளது. எனவே இவர்களில் பலருக்கும் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பாலை வார்த்த தீர்ப்பு
உயர்நீதிமன்ற கிளையின் இந்த அசத்தல் தீர்ப்பு தமிழ் வழியில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது. அதே நேரத்தில் உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து சிபிஎஸ்இ மேல்முறையீடு செய்யவும் வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.