கலால் வரியை திரும்ப பெற வலியுறுத்தி நகை வியபாரிகள் வேலை நிறுத்தம்
சென்னை: தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிப்பதை மத்திய அரசு திரும்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நகை கடை வியபாரிகள் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த நகைக் கடை வியாபாரிகள் இன்று முதல் 3 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து நகை கடை வியபாரிகள் கூறுகையில், ரூ.2 லட்சத்துக்கு மேல் நகை வாங்குவோர் பான் அட்டை வைத்திருப்பது கட்டாயம் என்று கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. இதனால் நாங்கள் ஏற்கெனவே பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறோம்.
இந்நிலையில், தங்க நகைகளுக்கு ஒரு சதவீத கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது எங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எங்கள் துறையை மேம்படுத்த மத்திய அரசு அக்கறை காட்டாததால் ஒட்டுமொத்த நகைக் கடை தொழிலாளர்களும் அதிருப்தியில் உள்ளோம்.
இந்த பட்ஜெட்டில் எங்கள் தொழில்துறையை மேம்படுத்த ஏதேனும் அறிவிக்கப்படும் என்று காத்திருந்த எங்களுக்கு, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து தங்க நகைக்கடை வியாபாரிகள் அனைவரும் இன்று முதல் மூன்று நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என்றனர்.












Click it and Unblock the Notifications