நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது.. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு மீது ஹைகோர்ட்டில் இன்று விசாரணை
சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணை வருகிறது.
சென்னை: தமிழக சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிச்சாமி கடந்த வியாழக்கிழமை முதல்வராக பதவியேற்றார். அவரது அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் முதல்வர் கொண்டுவந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகளான திமுக, காங்கிரஸ், எதிரணியாக செயல்பட்ட ஓபிஎஸ் தரப்பும் வலியுறுத்தியது.
ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்தரப்பினரின் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. மைக் உடைப்பு, மேஜை உடைப்பு, சட்டை கிழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. சபாநாயகர் பிடித்து தள்ளப்பட்டார். அவரது நாற்காலியில் திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்தனர்.
அதை தொடர்ந்து தி.மு.க., எம்.எல்.ஏக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 122 ஓட்டுகளும், எதிராக 11 ஓட்டுகளும் விழுந்ததாக அறிவிக்கப்பட்டது.
சபாநாயகரின் அறிவிப்பு சட்டவிரோதமானது, தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர், தேர்தல் ஆணைய அதிகாரி மேற்பார்வையில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்வதாகக் கூறிய நீதிபதிகள், செவ்வாய்க்கிழமை அவசர வழக்காக விசாரிக்கப்படும் எனத் தெரிவித்தனர். ஆனால், நேற்றைய வழக்கு விசாரணைப் பட்டியலில் திமுக தொடர்ந்த வழக்கு இடம் பெறவில்லை.
இதனால், திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்திடம் மனு மீது இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறும் என பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் அடங்கிய முதலாம் அமர்வு தெரிவித்தது. பட்டியலில் இடம் பெறாததால் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications