மாலையில் புழல் சிறையிலிருந்து தப்பிய திருடன்.. அதே சிறைக்குள் நள்ளிரவில் சிக்கிய காமெடி!
தப்பி ஓடிய கைதியை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சென்னை: புழல் சிறையிலிருந்து தப்பி ஓடிய கைதி, வெகு நேரம் கழித்து புழல் சிறையிலேயே கையும் களவுமாக பிடிப்பட்டார்.
தமிழகத்தில் மொத்தம் 9 மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. இருந்தாலும் புழலில் உள்ள விசாரணைக் கைதிகள் பிரிவில் மட்டும் அதிகமான அளவில் கைதிகள் உள்ளனர். தற்போது 1543 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.பொதுவாக இங்கு மாலை 6 மணிக்கு கதவை அடைத்தால், மறு நாள் காலை 6 மணிக்குத் தான் திறக்கப்படும்.

6 மணிக்குள் மாலை உணவை முன்பாகவே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தான் நேற்றுமுன்தினம் மாலையும் கைதிகளுக்கு உணவு கொடுக்கப்பட்டது. எல்லோரும் அவரவரர் உணவை வாங்கி கொண்டனர். பின்னர் அவர்களை உரிய பிளாக்குகளில் அடைக்க போலீசார் கைதிகளை அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது கைதிகளை கணக்கிடுகையில் ஒருவர் மட்டும் மிஸ்ஸிங்.
கைதி மாயமானதையடுத்து, சிறைத்துறை பரபரப்பானது. ஒருபக்கம், எல்லா இடங்களிலும் தேடும் பணியும் துவங்கியது. மற்றொரு பக்கம் கைதி தப்பியது குறித்து சிறைத்துறை நிர்வாகத்திடம் புகாரும் அளிக்கப்பட்டது. அதனால் வெளியில் தப்பி செல்ல வாய்ப்பு குறைவு என்று என்பதால், ஒட்டுமொத்த பேரும் சிறைக்குள்ளேயே தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

மாலை 6 மணியிலிருந்து கைதியை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. நள்ளிரவு ஒரு மணி இருக்கும். சிறைச்சாலையின் நூலகத்தின் மாடியில் இருக்கும் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் அந்த கைதி பதுங்கி இருந்ததை சிறை காவலர்கள் கண்டுபிடித்தனர். பின்னர் அவரை சுற்றிவளைத்து விசாரணை நடத்தியதில், அவர் பெயர் ராஜேஷ் என்பது தெரியவந்தது.
22 வயதான ராஜேஷ் பெசன்ட் நகரை சேர்ந்தவர் என்றும், இவர் மீது திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளதால், கடந்த 1-ம் தேதி புழலில் அடைக்கப்பட்டார் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அவரை அழைத்து வந்த போலீசார் மீண்டும் சிறைக்குள் அடைத்தனர். தப்பி ஓடியதுடன், மாலையிலிருந்து நள்ளிரவு வரை சிறைத்துறை காவலர்களுக்கு போக்கு காட்டிய அந்த கைதியால் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications