தீபா வேட்புமனு நிராகரிக்கப்பட்டதுக்கு இதுதான் காரணமாம்!
சரியான முறையில் பூர்த்தி செய்யாததால் ஜெ.தீபாவின் வேட்புமனு தேர்தல் ஆணைய அதிகாரிகளால் நிராகரிப்பட்டு உள்ளது.
Recommended Video
சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்திருந்த ஜெ.தீபாவின் வேட்புமனுவில் சரியான தகவல்கள் இல்லாததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
ஆர்.கே நகர் இடைதேர்தலுக்கான வேட்புமனுவின் மீதான பரிசீலனை இன்று நடைபெற்றது. இதில் தி.மு.க வேட்பாளர் மருது கணேஷ், நாம்தமிழர் வேட்பாளர் கலைக்கோட்டுதயம், டிடிவி தினகரன் ஆகியோரது வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
தீபாவின் மனு இன்று நிராகரிக்கப்பட்டது. போதிய தகவல்களை வேட்புமனுவில் குறிப்பிடாததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது. ஜெ.தீபாவின் மனுவினை ஏற்கக்கூடாது என்று அ.தி.மு.க.,வைச் சார்ந்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் புகார் அளித்து இருந்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: தேர்தல் ஆணையத்திடம் தீபா அளித்திருந்த வேட்புமனுவில் பல குளறுபடிகள் இருந்தன. அதிலும் சொத்து மதிப்பு, வழக்கு விபரங்கள், திருமணம் குறித்த தனிப்பட்ட தரவுகளை நிரப்பவேண்டிய இடத்தில் கூட அவர் சரியாக எந்த தகவலையும் நிரப்பவில்லை. தனது கணவர் மாதவனின் பெயரைக் கூட சரியாக குறிப்பிடாமல் மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
முக்கிய பிரமாணப் பத்திரமான படிவம் 26ல் இருக்கும் மொத்தம் 14 பக்கத்தில் ஒரு பக்கத்தைக் கூட அவர் நிரப்பவில்லை. அது தான் முக்கியமானது. அதையே நிரப்பாததால் நானும், சில சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் அதிகாரிக்கு இது குறித்து புகார் அளித்து இருந்தோம். அதனடிப்படையில், தீபாவின் மனு நிராகரிக்கப்பட்டு உள்ளது என்றார்.