எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது- ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - கெஜ்ரிவால் 'மகிழ்ச்சி'
20 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லாது என்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்
Recommended Video
சென்னை: ஆம் ஆத்மியின் 20 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை பதவி நீக்கம் செய்தது தவறு என்று இந்த தீர்ப்பு உணர்த்துவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் கெஜ்ரிவால்
20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த ஜனாதிபதியின் உத்தரவையும் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் 20 பேர் அமைச்சர்களின் நாடாளுமன்ற செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இரட்டை ஆதாய பதவி வகித்ததாக புகார் எழுந்தது. டெல்லி அரசின் முடிவை கடுமையாக எதிர்த்த பாஜக எதிர்கட்சிகள், ஆதாயம் தரும் இரட்டை பதவிகளை வகிப்பது என்பது சட்டத்தை மீறிய செயல் என சரமாரியாக குற்றம்சாட்டின.
இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க முன் தேதியிட்டு சட்டத் திருத்தத்தை டெல்லி அரசு கொண்டு வந்தது. ஆனால் இச்சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் அளிக்க அப்போதைய குடியரசு தலைவர் பிரணாப் அனுமதி அளிக்க மறுத்து விட்டார்.
இதனிடையே பஞ்சாப் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜர்னைல் சிங் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அந்த 20 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் புகார் தெரிவித்தன. இந்த புகாரின் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இதனை விசாரித்த தேர்தல் ஆணையம் இதில் 2015 மார்ச் முதல் 2016 செப்டம்பர் வரை ஆதாயம் தரும் இரட்டை பதவி வகித்து வருவதாக 20 எம்எல்ஏக்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டு உண்மை என்பதால், அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம் என கடந்த குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்தது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட 20 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார்.
தேர்தல் ஆணையத்தின் தகுதிநீக்க பரிந்துரையை எதிர்த்து ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் 20 பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தேர்தல் ஆணையம் மற்றும் எதிர்கட்சிகளின் வாதம் நிறைவடைந்த நிலையில் இன்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 20 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்த தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்து குடியரசுத்தலைவர் ராம்கோவிந்த் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
கெஜ்ரிவால் மகிழ்ச்சி
सत्य की जीत हुई। दिल्ली के लोगों द्वारा चुने हुए प्रतिनिधियों को ग़लत तरीक़े से बर्खास्त किया गया था। दिल्ली हाई कोर्ट ने दिल्ली के लोगों को न्याय दिया। दिल्ली के लोगों की बड़ी जीत। दिल्ली के लोगों को बधाई। https://t.co/eDayHziHSn
— Arvind Kejriwal (@ArvindKejriwal) March 23, 2018
இந்த தீர்ப்பினால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மகிழ்ச்சியடைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உண்மை வென்றது. டெல்லி மக்களுக்கும், ஜனநாயகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று கூறியுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை பதவி நீக்கம் செய்தது தவறு. இதையே இந்த தீர்ப்பு உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார்.