திரையிலும் வெற்றி முழக்கமிட்ட இசை முரசு இ.எம்.ஹனீபா
சென்னை:
"கடலிலே தனிமையில் போனாலும்...
கண்மணி உன் நினைவில் களைப்பாருவேன்...
அலைகளில் தத்தளித்தாலும்...
அவள் நினைவிலே முக்குளிப்பேன்...".
இந்த வரிகள் 90களில் காதலர்கள் முணுமுணுத்த வரிகள்...

செம்பருத்தி படத்தில் இளையராஜாவின் இசையில் நாகூர் ஹனிபா பாடிய இந்த பாடல் அன்றைய காதலர்களின் ஹிட் லிஸ்ட்டில் இடம் பெற்ற பாடல்.
இந்த பாடலை பாடிய கம்பீரக் குரலுக்குச் சொந்தக்காரரான நாகூர் ஹனிபா இன்றைக்கு நம்மிடையே இல்லை. ஆனாலும் அவர் பாடிய பாடல்கள் நம்முடைய காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்த நாகூர் ஹனிபாவின் இயற்பெயர் இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்பதாகும். அப்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிபா என்று அழைக்கப்பட்டார். தந்தையின் பூர்வீகம் நாகூர் என்பதால் பெயரோடு நாகூரும் சேர்ந்து கொண்டது.
பள்ளிப் பருவத்தில் இருந்தே பாடத் தொடங்கிய ஹனிபா, ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியும், இசை நிகழ்ச்சிகளை நடத்தியும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்தார். வெளிநாடுகளிலும் அவரது இசை நிகழ்ச்சிகளுக்கு தனி மவுசு உண்டு.
நட்ட நடுக்கடல் மீது
தமிழ் சினிமாவில் மெல்லிசை பாடகர்களுக்கு மத்தியில் தனது கணீர் குரலால் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் நாகூர் ஹனிபா. ‘எல்லோரும் கொண்டாடுவோம்' ‘நட்ட நடு கடல் மீது' ‘உன் மதமா என் மதமா' உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் அவருக்கு சிறப்பு சேர்த்தன.
இறைவனிடம் கையேந்துங்கள்
‘இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை' என்ற பாடல் சாதி மத வேறுபாடுகளைக் கடந்து பட்டிதொட்டியெங்கும் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்துக்கள் பண்டிகையிலும் இந்தப்பாடல் பாடப்படுவது சிறப்பம்சம்.
பள்ளிப்பருவத்திலேயே
ஐந்தாம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை முடித்த நாகூர் ஹனிபா தனது 11-வது வயதில் பாடத் தொடங்கினார். இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை கச்சேரிகளில் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு, பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒரியா திரைப்படங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை அவர் பாடியுள்ளார். கடந்த 65 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான திருமண வீடுகளில் பாடியுள்ளார்.
பெரியார் - அண்ணா உடன்
திராவிட முன்னேற்றக் கழகம் உருவாகி நான்கே நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. பெரியாரின் சீடராக இருந்த நாகூர் ஹனிபா, அறிஞர் அண்ணாவுடன் இணைந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காக முழுமூச்சாய் பெரிதும் பாடுபட்டார். 1953 ஆம் ஆண்டில் கைத்தறி நெசவாளர்கள் துயரங்களைத் தீர்க்க அண்ணா உடன் இணைந்து வீதி வீதியாய் சென்று பாடி கைத்தறி துணி விற்றார் ஹனிபா.
அழைக்கின்றார் அண்ணா
1955-ஆம் ஆண்டு, "நம் நாடு" கழக ஏட்டில் வெளிவந்த ‘அழைக்கின்றார் அண்ணா' என்ற பாடலை ஹெச்.எம்.வி நிறுவனம் பதிவு செய்ய, நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் இசைத்தட்டு வெளியானபோது, அப்பாடல் தமிழகத்தில் ஓர் இசைப்பிரளயத்தை உண்டு பண்ணி தென்னக அரசியலில் ஒரு மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த மூலக்காரணமாக இருந்தது. அந்த இசைத்தட்டுதான் அந்த ஆண்டில் அதிகம் விற்று விற்பனையில் ஒரு சாதனையைப் படைத்தது. அப்படிப்பட்ட காந்தக் குரல் ஹனிபாவுடையது. ஒலிபெருக்கியையே அதிர வைத்த கம்பீரச் சாரீரம் அது.
அரசியலில் ஹனிபா
ஆரம்ப காலம் முதல் தி.மு.க.வில் இருந்த அவர், 1957-ம் ஆண்டு நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தி.மு.க. சார்பில் நடந்த போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு சிறை சென்றிருக்கிறார். தமிழக சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார்.
ஜெயலலிதாவிடம் தோல்வி
2002-ஆம் ஆண்டு வாணியம்பாடியில் தேர்தலில் மொத்தம் பதிவான 2,02,883 வாக்குகளில், அதிமுக வேட்பாளர் ஆர்.வடிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்ட நாகூர் ஹனிபா பெற்ற வாக்குகள் வெறும் 43,878 மட்டுமே. முதல் சுற்றிலிருந்தே திமுக வேட்பாளரான நாகூர் ஹனிபா பின் தங்கியிருந்தார். 9-வது சுற்று வாக்குஎண்ணிக்கையின்போது வாக்கு வித்தியாசம் மிக அதிகமாகிவிடவே ஓட்டு எண்ணும் இடத்திலிருந்து ஹனிபா வெளியேறி விட்டார். இது அவரது அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியாகும்.
எட்டுதிசைகளிலும் எதிரொலிக்கும்
தன்னுடைய 90 வயது வரையிலும் கம்பீர குரலினால் பாடி இசைக்கு பெருமை சேர்த்த நாகூர் ஹனிபா இன்று நம்மிடைய இல்லை என்றாலும் அவருடைய கம்பீரக்குரல் எட்டு திசைகளிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.












Click it and Unblock the Notifications