இது இடைத் தேர்தல் அல்ல.. "எடை"த் தேர்தல்.. ஆர்.கே.நகர் தீர்ப்பு எப்படி இருக்கப் போகிறது?
அதிமுக தேர்தல் சின்னம் முடக்கம் பரபரப்பாக பேசப்பட்டாலும் கூட ஆர்.கே.நகர் மக்கள் அளிக்கப் போகும் தீர்ப்புதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் மாறியுள்ளது.
சென்னை: இரட்டை இலை யாருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், அச்சின்னம் தற்போது முடங்கி விட்டது. தற்போது மக்கள் முன்பு ஏகப்பட்ட ஆப்ஷன்கள். இது ஆர்.கே.நகருடன் முடிந்து விடக் கூடியதல்ல என்பதால் ஆர்.கே.நகர் மக்கள் அளிக்கப் போகும் தீர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என்று அதிமுக இரண்டு அணிகளாக பிளவுப்பட்டது. அதன் பிறகு நாள்தோறும் பல்வேறு அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வந்தன.
ஜெயலலிதா இரண்டு முறை வெற்றி கண்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுகவின் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, திமுக, தேமுதிக, பாஜக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் என 7 முக்கிய கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இரட்டை இலைக்கு மோதல்
இந்தத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னத்தைக் கைப்பற்ற அதிமுகவின் இரு அணிகளும் முட்டி மோதின. தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று ஓ.பி.எஸ். தலைமையிலான அணி வாதாடிப் பார்த்தது.
சசிகலா தரப்பு
எங்களிடம் 122 எம்எல்ஏ-க்களும், 38 எம்.பி.க்களும் உள்ளனர் என்றும், உண்மையான அதிமுக தாங்கள் தான் என்றும், அதிமுக பொதுச் செயலாளரை அடிமட்ட தொண்டர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் டிடிவி தினகரனை வேட்பாளராக அங்கீகரித்தது அதிமுக ஆட்சி மன்றக் குழுவினர்தான் என்றும் சசிகலா தரப்பினரும் தலைமை தேர்தல் ஆணையரிடம் முறையிட்டனர்.
யாருக்கும் இல்லாமல் போன அதிமுக
இந்த சூழலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக இறுதி முடிவை நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்டு அதிமுகவினர் தலையில் இடியை இறக்கி விட்டது. கொடி, சின்னம், பெயர் என அனைத்தையும் கூண்டோடு முடக்கி விட்டது.
மக்கள் தீர்ப்பு என்னவோ
தற்போது கிட்டத்தட்ட இவர்களின் பிரச்சினைகள் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளன. இனி மக்களின் ஆட்டம் ஆரம்பிக்கப் போகிறது. மக்கள் அளிக்கும் தீர்ப்பை வைத்தே மக்களின் ஆதரவு யாருக்கு? உண்மையான அதிமுக யார்? ஜெயலலிதாவின் மரண மர்மம் வெளியே வருமா? இல்லையா? என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.
மக்கள் செய்ய வேண்டியது
வாக்குரிமை என்பது மக்களின் ஜனநாயக கடமை மட்டும் அல்ல, அது ஒரு கூர்மையான ஆயுதமாகும். இங்கு போட்டியிடும் கட்சிகள் திருமங்கலம் பார்முலாவை பயன்படுத்தக் கூடும். அதை விட மகா மோசமான பார்முலாவைக் கூட அறிமுகப்படுத்தக் கூடும். ஆனால் அதற்கெல்லாம் விலை போகாமல் யாரை தேர்ந்தெடுத்தால் தொகுதிக்கு நன்மை கிடைக்கும்? தொகுதி பிரச்சினைகள் தீரும்? என்பதை எடை போட்டு பார்க்க வேண்டும்.
லட்சம் ரூபாய் கொடுத்தாலும்...
ஒரு வோட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தாலும் சரி, லட்சமே கொடுத்தாலும் கூட மக்கள் அதை புறக்கணித்து, நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும். பணத்திற்காக வோட்டு போட்டுவிட்டு பிறகு சாலை இல்லை, குடிநீர் இல்லை, சாக்கடை வசதி இல்லை என்று கூறுவதில் எந்த பலனும் இல்லை என்பதை மக்கள் இப்போது உணர ஆரம்பித்து விட்டனர்.
மக்கள் முன்னேற்றம்
பணத்தை கொடுத்தாலும் மக்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத்தான் செய்வார்கள் என ஆட்சியாளர்கள் பயப்பட வேண்டும். அந்த அளவுக்கு மக்களின் அதிகாரம் வலுப்பட வேண்டும்.
போராட்டங்களுக்கு பலனில்லை
ஜல்லிக்கட்டு, நெடுவாசல், பவானி ஆற்றின் மீது தடுப்பணை உள்ளிட்ட விவகாரங்களில் மக்கள் கடுமையான போராட்டத்தை ஒரு இயக்கம் போல எடுத்துச் சென்று வரலாறு படைத்துள்ளனர். இப்படிப்பட்ட வரலாறு படைத்த தமிழக மக்களை தலை நிமிர வைக்க வேண்டிய கடமை, மிகப் பெரிய பொறுப்பு ஆர்.கே.நகர் மக்களுக்கு உள்ளது. இதில் அவர்கள் கடமை தவறினால், ஒட்டுமொத்த தமிழகமும் தலைகுனிய நேரிடும்.
தப்புகள் அதிகரிக்கும்
என்ன தப்பு செய்தாலும் இந்த மக்களுக்கு பணத்தை கொடுத்து சரி கட்டி விடலாம் என்று கட்சிகள் கருதும் நிலை ஏற்பட்டு விடும். மக்கள் மீதான மரியாதை போய்விடும். எனவே கட்சி, சின்னம் ஆகியற்றை பற்றி கவலைப்படாமல் நேர்மையான, சரியான, பொருத்தமான, மக்களுக்கு உண்மையாக உழைக்கக் கூடிய வேட்பாளர் யாரென்று அலசி ஆராய்ந்து வாக்கு அளிக்க வேண்டிய கடமை மக்களுக்கு உள்ளது.
இதை "எடை"த் தேர்தல்
இது உண்மையில் இடைத் தேர்தல் அல்ல. மாறாக எடைத் தேர்தல். அதாவது மக்கள் தங்களைத் தாங்களே எடை போட்டுப் பார்த்து தங்களது நேர்மை, நியாயம், தர்மம், நீதி ஆகியவற்றை சுயமாக எடை போட்டுப் பார்க்கக் கிடைத்த அருமையான வாய்ப்புதான் இந்த இடைத் தேர்தல். ஒட்டுமொத்த மக்களின் கவனமும் தற்போது ஆர்.கே.நகர் பக்கம் திரும்பியுள்ளது. தாங்கள் சுத்தமானவர்கள் என்பதை நிரூபிக்கும் பெரும் பொறுப்பில் ஆர்.கே.நகர் வாசிகள் உள்ளனர். பார்க்கலாம் என்னை செய்யப் போகிறார்கள் என்பதை.