கல்யாணமாகி 2 நாள் தான்.. எந்த காதலியும் செய்யக்கூடாத வேலை.. கலங்கி போய் அருண் எடுத்த விபரீத முடிவு
கோவை: கல்யாணம் ஆன இரண்டாவது நாளே, காதலி தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றதால் விரக்தி அடைந்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சித்தார். இந்த சம்பவம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நடந்துள்ளது.
காதல் குறித்து சரியான புரிதல் இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறும் இளம் ஜோடிகள், திருமணம் செய்து கொண்ட பின்னர் எதார்த்தத்தை உணர்கிறார்கள். ஆனால் இதனை சரியான பக்குவத்துடன் கையாள்வர்கள் காதலிலும் வென்று வாழ்க்கையிலும் வெல்வார்கள். மாறாக சரியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல், திருமண வாழ்க்கையின் மீது பயம்வந்து பெற்றோருடன் சென்றுவிடுகிறார்கள். இது காதலனையோ அல்லது காதலியையோ கடுமையாக பாதிக்கிறது.

அப்படி ஒரு சம்பவம் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நடந்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே டி.நல்லிகவுண்டன் பாளையத்தை சேர்ந்த 28 வயதாகும் அருண் சக்கரவர்த்தி தனியார் கம்பெனி ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிபாளையம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழகினார். இதைத் தொடர்ந்து அவர்கள் கடந்த 6 மாதங்களாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்தார்கள்.
இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று பயந்து கடந்த ஜூலை 1-ந்தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி ஆச்சிப்பட்டியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டார்கள். இதற்கிடையே அவர்கள் 2 பேரும் காணாமல் போனதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதை அறிந்த காதல் ஜோடி பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்து பாதுகாப்பு கேட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அருண் சக்கரவர்த்தியுடன் அந்த பெண்ணை அனுப்பி வைத்தனர்.
இதனிடையே அந்த பெண்ணிடம் உறவினர்கள் சிலர் வீட்டுக்கு வந்துவிடுமா என்று உருக்கமாக பேசியிருக்கிறார்கள். இதை கேட்ட அந்த பெண் தாலியை கழற்றி அருண் சக்கரவர்த்தியிடம் கொடுத்து விட்டு, பெற்றோர் வீட்டிற்கு போய் விட்டாராம்.
இதனால் மனவேதனை அடைந்த அருண் சக்கரவர்த்தி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலுகா போலீசார் தற்கொலை முயற்சி வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கல்யாணம் ஆன இரண்டாவது நாளே, காதலி தாலியை கழற்றி கொடுத்துவிட்டு பெற்றோருடன் சென்றதால், கணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications