ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லை.. அவரது வீடு நினைவு இல்லமாக்கப்படும்.. ஆட்சியர் உறுதி!
ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அவரது வீடு நான்கு மாதத்தில் நினைவு இல்லமாக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால் அவரது வீடு நான்கு மாதத்தில் நினைவு இல்லமாக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவர் வசிக்கும் போயஸ் கார்டன் இல்லத்தை மக்கள் வெளியே இருந்தபடியே பார்க்க பொதுமக்களுக்கு சில நாட்கள் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து சசிகலாவுடனான மோதலுக்குப் பிறகு போயஸ்கார்டன் இல்லம் நினைவு இல்லம் ஆக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
மதிப்பிடும் பணி
கடந்த 30 ஆம் தேதி ஜெயலலிதா வீட்டை ஆர்ஜிதம் செய்வதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்றன. இதற்காக சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள் போயஸ் கார்டன் வீட்டுக்கு சென்று வீடு முழுவதும் மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
தனிக்குழு அமைப்பு
ஆர்ஜிதம் செய்வதற்காக தனி குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில், வருவாய்துறை, பொதுப்பணித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, செய்தி தொடர்பு துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
நேரடி வாரிசுகள் இல்லை
இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என நேரடி வாரிசுகள் யாரும் இல்லை என அவர் தெரிவித்தார். வேதா இல்லத்திற்கு தீபா, தீபக் சொந்தம் கொண்டாடுவது குறித்த கேள்விக்கு ஆட்சியர் இவ்வாறு பதில் கூறினார்.
4 மாதத்தில் நினைவில்லமாக்கப்படும்
ஜெயலலிதாவுக்கு என நேரடி வாரிசுகள் இல்லாததால் அவரது வீடு நான்கு மாதத்தில் நினைவில்லமாக்கப்படும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். இதற்கான பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பதாகவும் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.
சீல் வைத்த அறைகள்
வருமான வரி சோதனையால் நினைவு இல்லமாக்கும் பணி பாதிக்காது என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் வருமான வரித்துறையினர் சீல் வைத்த அறைகளை தாங்கள் திறக்கவில்லை என்றும் ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்.