அவசரத்துக்கு எடுத்து போறேன்.. திரும்ப கொடுத்துருவேன்.. பக்சே, நான் கள்ளன் இல்லையாக்கும்!
பணம், நகை திருடியதுடன், நான் திருடன் இல்லை என்று எழுதி வைத்துள்ளான் ஒருவன்.
Recommended Video

கேரளா: "நேர்மையும் நாணயமும்" மிக்க ஒரு யோக்கிய திருடனை கேரள போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காசர்கோடு மாவட்டத்தில் உடினூர் என்ற பகுதி உள்ளது. இங்கு வசித்து வருபவர் முனீரா. இவர் வீட்டுக்கு தொலைவில் உள்ள ஆயிஷா என்பவர் வீடு. நேற்றுமுன்தினம் உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்க முனீரா வீட்டை பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார்.

இதனை பயன்படுத்திக் கொண்ட திருடன் ஒருவன், முனீரா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பணம், மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிட்டான். அதேபோல, ஆயிஷாவின் வீட்டிலும் கதவை உடைத்து கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளான். ஆனால் ஆயிஷா வீட்டில் எவ்வளவு கொள்ளை போனது என்பது உடனடியாக தெரியவில்லை.
வீடு திரும்பிய முனீரா, கதவு உடைக்கப்பட்டு, நகை, பணம் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். 2 சவரன் நகை உட்பட 32 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. பின்னர், அவரது வீட்டுக்குள் இருந்த ஒரு தூணில், "அவசர தேவைக்காக பணத்தை எடுத்திருக்கிறேன். கண்டிப்பாக திருப்பி தந்துவிடுவேன். நான் திருடன் இல்லை" என்று எழுதப்பட்டிருந்தது கண்டு முனீரா மேலும் அதிர்ந்தார்.
இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், முனீரா வீட்டின் கொள்ளை குறித்தும், ஆயிஷா வீட்டின் கொள்ளை குறித்தும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அத்துடன், யோக்கியமான அந்த திருடனையும் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications