ப்ப்பா இதுதான் தமிழ்நாடு! சர்ச்சில் ஓய்வு எடுத்த மாசித் திருவிழா பக்தர்கள்.. என்ன ஒரு நல்லிணக்கம்!
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் உள்ள சர்ச் ஒன்றில் இந்து பக்தர்கள் தங்கி ஓய்வு எடுத்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
கர்நாடகாவில் தற்போது ஹிஜாப் விவகாரம் காரணமாக பெரிய அளவில் மத மோதல் வெடித்துள்ளது. இந்து இஸ்லாமிய மத மோதலாக இது உருவெடுத்துள்ளது. இந்து - இஸ்லாமிய மாணவ, மாணவியர் இடையே கல் வீசி தாக்கிக்கொள்ளும் அளவிற்கு நிலைமை கைமீறி சென்றுள்ளது.
தமிழ்நாட்டிலும் கூட கடந்த சில வாரங்களுக்கு முன் அரியலூர் மாணவி மரணத்தின் காரணமாக மத ரீதியாக மோதல் ஏற்படுமோ என்ற அச்சம் எழுந்தது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட மோதல்கள் எதுவும் ஏற்படவில்லை.

திருச்செந்தூர் கோவில்
இந்த நிலையில் திருச்செந்தூரில் உள்ள சர்ச் ஒன்றில் நடந்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவிலில் எல்லா வருடமும் மாசித் திருவிழா நடைபெறுவது வழக்கம். பல ஊர்களில் இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் வருவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு வருடமாக இந்த மாசித் திருவிழா நடத்தப்படவில்லை. கோவிலுக்கு உள்ளேயே கட்டுப்பாடுகளுடன் விழா நடத்தப்பட்டது. மாறாக கொரோனா காரணமாக பக்தர்கள் யாரும் மாசித் திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

பக்தர்கள்
ஆனால் இந்த வருடம் திருச்செந்தூரில் மாசித் திருவிழா நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பக்தர்கள் இதில் கலந்து கொள்ளவும், அதேபோல் நடைபயணம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடந்த 7ம் தேதி மாசித் திருவிழா தொடங்கியது. வரும் 18ம் தேதி வரை இந்த மாசித் திருவிழா நடக்க உள்ளது. கடந்த 7ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

நடைபயணம்
இந்த நிலையில் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் நடைபயணமாக பாத யாத்திரை மேற்கொண்டு திருச்செந்தூருக்கு வந்து இருந்தனர். வேண்டுதல் காரணமாக பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்து திருச்செந்தூரில் மாசித் திருவிழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் வந்து இருந்தனர். இவர் மாசித் திருவிழாவிற்கு வரும் வழியில் திருச்செந்தூர் அருகே இருந்த சர்ச் ஒன்றில் ஓய்வு எடுத்த சம்பவம் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

பல கிலோ மீட்டர்
பல கிலோ மீட்டர் தூரம் நடந்து கலைப்பாக வந்தவர்கள் திருச்செந்தூர் அருகே சர்ச் ஒன்றில் தங்கி ஓய்வு எடுத்துள்ளனர். இரவு நேரத்தில் வெளியே தங்க இடம் இல்லாதவர்களுக்கு அங்கேயே உறங்க கிறிஸ்துவ தேவாலய நிர்வாகம் அனுமதி கொடுத்துள்ளது. இதையடுத்து இந்து பக்தர்கள் உறங்கி ஓய்வு எடுத்துள்ளனர். சிலர் வளாகம் உள்ளேயும், சிலர் இடம் இல்லாததால் வெளியேயும் உறங்கி ஓய்வு எடுத்தனர்.

போட்டோ பிரபலம்
இந்த புகைப்படமே இணையம் முழுக்க வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களில் மத ரீதியான மோதல்கள் நடக்கின்றன. மத கலவரங்கள் நடக்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மக்கள் மத நல்லிணக்கத்தோடு வசித்து வருகிறார்கள். மக்கள் இங்கே ஒற்றுமையாக இருக்கிறார்கள். இதுதான் தமிழ்நாடு என்பதை காட்டும் வகையில் இந்த புகைப்படம் உள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி உள்ளனர்.












Click it and Unblock the Notifications