திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை.. அதிகாரிகள் டார்ச்சர் காரணமா? கடிதத்தில் பரபரப்பு தகவல்
சேலம் : ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம், மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியாளர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் மாதம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தார். இந்த வழக்கு முதலில் தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கோகுல்ராஜும், நாமக்கல் மாவட்டம் பரமத்தியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் தீவிரமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று கோகுல்ராஜும், அந்த பெண்ணும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாதீஸ்வரர் கோவிலில் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது ஒரு கார் வந்து நிற்க அதிலிருந்து இறங்கியவர்கள் கோகுல்ராஜை மட்டும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்த காட்சிகள் யாவும் அந்த கோவிலின் சிசி டிவியில் பதிவாகியிருந்தது.
இந்த வீடியோ வெளியானதையடுத்து, கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக கூறியும், இதை கொலை வழக்காக பதிவு செய்ய வலியுறுத்தியும், அவரது சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இந்த வழக்கு கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட 5 தனிப்படைகளில் ஒரு பிரிவு திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தலைமையில் அமைக்கப்பட்டது. இந்நிலையில் அவர் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், கோகுல்ராஜ் வழக்கை சரிவர விசாரிக்கவில்லை என உயர் அதிகாரிகள் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியாவை அடிக்கடி திட்டியதாகக் கூறப்படுகிறது. உயர் அதிகாரிகள் கொடுத்த டார்ச்சரால் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே, குடும்பப் பிரச்னை காரணமாக டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டார். அதற்கு ஆதாரமாக அவர் எழுதிய கடிதம் கிடைத்துள்ளது என சேலம் மாவட்ட எஸ்.பி. செந்தில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications