திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம். தனித்து போட்டி குறித்தும் ஆலோசனை: திருமாவளவன்
மயிலாடுதுறை: திமுகவுடனான தற்போதைய கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை.. அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
ஆகஸ்டு 17-ந் தேதி நடைபெற உள்ள மாநாட்டில் அனைத்து தனியார் பள்ளிக் கூடங்களிலும் 25% இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்படும்.
வருகிற 20-ந் தேதியிலிருந்து தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகிற சட்ட மன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை செய்யப்படும். இது வரை திமுக கூட்டணியில்தான் இருக்கிறேம். அதில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை.
தர்மபுரியில் நத்தம் காலனியில் தலித்துகள் வீடுகளில் புகுந்து தலித் இளைஞர்கள் ஆயுதம் வைத்திருந்ததாக கைது செய்து காவலில் அடைத்தது வன்மையாக கண்டிக்கதக்கது.
இதில் தமிழக முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். சென்னையில் 11 மாடி கட்டிடம் இடிந்தது குறித்து சிறப்பு புலனாய்பு விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை விடுத்திருந்தேன். அதன்படி சிறப்பு விசாரணை அமைத்த தமிழக முதல்வருக்கு நன்றி.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.