ராஜபக்சேவின் கோரிக்கையை இந்தியா ஏற்பதா?: திருமா. கண்டனம்
சென்னை: ராஜபக்சேவின் கோரிக்கையை ஏற்று 16 அமைப்புகளுக்கு தடைவிதித்துள்ள மத்திய அரசுக்கு, விடுதலை சிறுத்தைகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமானவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈழத் தமிழர்கள் நலனுக்காக செயல்பட்டு வரும் 16 அமைப்புகளுக்கும் அவற்றின் ஆதரவாளர்களுக்கும் திடீரென ராஜபக்சே தடை விதித்து அதை ஏற்க உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கையை இந்திய அரசு உடனடியாக ஏற்றுகொண்டுள்ளது. இந்திய அரசின் இந்த போக்கை விடுதலை சிறுத்தை மிக வன்மையாக கண்டிக்கிறது.
இனப்படுகொலை குற்றத்திற்காகவும், மனித உரிமை மீறல்களுக்காகவும் சிங்கள அரசை சர்வதேச புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என அண்மையில் ஜெனிவாவில் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனை காரணம் காட்டி அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் ராஜபக்சேவின் கோரிக்கையை புறக்கணித்துள்ளன. ஆனால் வழக்கம் போல ராஜபக்சேவிற்கு ஆதரவாக தமிழ் ஈழத்திற்கு எதிராக இந்திய அரசு நிலைப்பாடு மேற்கொண்டுள்ளது. இது தமிழினத்திற்கு மட்டுமல்ல, ஐ.நா தீர்மானத்திற்கும் எதிரான நடவடிக்கையாகும்.
இந்திய அரசு தனது நிலைப்பாட்டை திரும்ப பெற வேண்டும். தமிழ் ஈழ அமைப்புகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு ராஜபக்சேவை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications