தமிழ் தலைவன் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்குங்கள்.. திருமாவளவன் கோரிக்கை
திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு முதல்வர் அனுமதி மறுத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கு மு.க.ஸ்டாலின் முதல்வரிடம் எழுத்துப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்தும் முதல்வர் அனுமதி மறுத்திருப்பது வேதனை அளிக்கிறது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி இயற்கை எய்தியுள்ளார். 95 வயதில் காலமானார் திமுக தலைவர் கருணாநிதி. அவரது மறைவிற்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் கருணாநிதி மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியை நல்லடக்கம் செய்வதற்கு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அமைந்திருக்கும் வளாகத்திற்குள் இடம் ஒதுக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரை சந்தித்து எழுத்துப் பூர்வமாக வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன் பின்னரும் பல்வேறு வழக்குகள் இருப்பதாக காரணம்காட்டி இடம் ஒதுக்க தமிழக முதல்வர் மறுத்திருப்பது வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.
சுமார் 80 ஆண்டு காலம் தமிழ் இனத்திற்குத் தொண்டாற்றிய, ஐந்து முறை முதலமைச்சராக இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தலைவர் கலைஞர். அவருக்கு உரிய மரியாதையை தமிழக அரசு தரவேண்டும் என்பது திமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல தமிழ் சமூகத்தின் கோரிக்கையும் ஆகும்.
இதை கவனத்தில் கொண்டு மெரினாவில் இடம் ஒதுக்கி அமைதியான முறையில் தலைவர் கலைஞரின் நல்லடக்கம் நடைபெற தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பு நல்க வேண்டுமென்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம்" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.