இதற்காகவே தனியாக ஒரு உளவுப்பிரிவு தொடங்க வேண்டும்.. அரசுக்கு திருமாவளவன் முக்கிய கோரிக்கை!
நெல்லை: சாதி, மத பிரச்சனைகளை தடுக்க தனி உளவுப்பிரிவு தொடங்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி, சக மாணவர்களால் வெட்டப்பட்ட நிலையில், அவர்களைச் சந்தித்த திருமாவளவன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பள்ளி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரி இருவரும் சின்னதுரையின் சக மாணவர்களால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் மாணவர் மற்றும் அவரது தாயாரை விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி சந்தித்து பேசி ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் திருமாவளவன் பேசும்போது, "நாங்குநேரி சம்பவம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க கல்வி வளாகங்களில் நடைபெறும் சாதிய மோதல்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்த நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் நல்ல வழி செய்யும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "குறிப்பிட்ட ஒரு நபர், அமைப்பு அல்லது சாதி தூண்டிவிட்டது என்று குற்றம்சாட்ட மாட்டேன். ஆனால் மாணவர்கள் இடையே இதுபோன்ற மோதல் உருவாக, சமூகச் சூழல் தான் காரணம். சுயசாதி பெருமை பேசுகிறேன் என்ற பெயரில், வேற்று சாதியை வெறுக்கும் சூழல் ஏற்படுவதை உற்றுநோக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரசு சார்பில் அவர்களுக்கு வேறு இடத்தில் வசிக்க அரசு வீடு வழங்கவேண்டும் என்ற சின்னதுரை குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை முதல்வரிடம் தெரிவித்தேன். பிள்ளைகளை பாதுகாப்பாக படிக்க வைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளம் தலைமுறையிடம் சாதி பெருமைகளை பேசுவது, தலித், பழங்குடியின, சிறுபான்மை சமுதாயத்தினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைப்பது தடுக்கப்பட வேண்டும். இந்த சமூகமே அதற்கு பொறுப்பேற்கும் நிலை இருக்கிறது. நாங்குநேரி, வள்ளியூரில் சாதி பெயரால் வன்முறைகள் தொடர்கின்றன. இதைத்தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
தீவிரவாத நடவடிக்கைகளை கண்காணிக்க தனி உளவுப்பிரிவு உருவாக்கப்பட்டு இருப்பதை போன்றே, சாதிய மதவாத பிரச்சனைகளை கண்காணிக்க தனியாக உளவுப்பிரிவு தேவைப்படுகிறது. தற்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தமிழ்நாட்டை குறிவைத்து இருக்கும் நிலையில், இந்த உளவுப்பிரிவு அவசியம் தேவைப்படுகிறது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications