காக்காய், குருவியை சுட்டால் கூட கேட்க அமைப்புகள் இருக்கு… மீனவர்களை சுட்டால்.. திருமாவளவன் ஆவேசம்
காக்காய், குருவியை சுட்டால் கூட கேட்க அமைப்புகள் இங்கே இருக்கின்றன. ஆனால் மீனவர்களை சுட்டால் கேட்க நாதி இல்லை என்று திருமாவளவன் கடுமையாக கூறியுள்ளார்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோவின் வீட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது:
பிரிட்ஜோவின் தாய் தந்தையரை பார்த்து ஆறுதல் கூறினோம். துப்பாக்கிக்கு மீனவர்கள் பலியாவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும். தமிழக மீனவர்கள் மீது அட்டூழியங்களை செய்து வரும் சிங்கள இனவெறியர்களை ஒரு முறை கூட கண்டித்து மத்திய அரசு பேசவில்லை. இலங்கை அரசு மீது சர்வதேச சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு இந்திய அழுத்தம் தர வேண்டும்.

காக்காய் குருவிகளை சுட்டால் கூட ஏன் என்று கேட்க பல அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் மீனவர்களை சுட்டுக் கொன்றால் அது பற்றி யாரும் வாய்திறந்து பேசுவதில்லை. இது வன்மையான கண்டனத்திற்குரியது. மோடி இங்கு வர வேண்டும். இல்லை என்றால் வெளிவிவகாரத்துறை அமைச்சர் வரவேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்தார்கள். யாராவது ஒருவராவது இந்த 4 நாட்களில் இங்கு வந்து ஆறுதல் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் ஒருவரும் வரவில்லை. இது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
மத்திய அரசு, தமிழர்களை இளிச்சவாயர்கள் என்று நினைத்து விட வேண்டாம். இந்த நிலை தொடர்ந்தால் இளைஞர்கள் பாடம் புகட்டும்நிலை விரைவில் உருவாகும். எனவே, மத்திய அரசு நல்ல பதிலை அளிக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications