ரஜினி இன்னும் வரவே இல்லையே... அதற்குள் ஏன் சிலர் அலறுகிறார்கள்? - திருமாவளவன்
சென்னை: ரஜினி கட்சி தொடங்கப் போவதாக இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவே இல்லை. ஆனால் அவர் பேச்சைக் கேட்டதுமே ஏன் சிலர் அலறுகிறார்கள் என்று கேட்டுள்ளார் திருமாவளவன்.
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதியாகிவிட்டது. அதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தொடர்ந்து வரவேற்றுப் பேசி வருகிறார்.
இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வரக் கூடாது என சிலர் மூர்க்கத்தனமாக எதிர்த்து வருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார் திருமாவளவன்.
போர்
அதில், "ரஜினிகாந்த் இன்னும் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. தனது ரசிகர்களை போருக்கு தயாராகுங்கள் என்று மட்டும்தான் சொல்லி இருக்கிறார்.
ஆண்டவன் என்னை இதுவரை ஒரு நடிகனாக ஆட்டி வைக்கிறார். இனிமேல் என்னை எப்படி வழி நடத்துவார் என்று எனக்கு தெரியாது என சொல்லி இருக்கிறார்.
ஏன் அலறுகிறார்கள்?
ரஜினியின் இந்தப் பேச்சை வைத்துக் கொண்டு சிலர் ஏன் அலறுகின்றனர் என்று தெரியவில்லை. அவர் அரசியலுக்கு வருவது பற்றி எந்த கவலையும் இல்லை. அச்சமும் இல்லை. சினிமா கவர்ச்சிக்கு தமிழக மக்கள் முக்கியத்துவம் தருவதால் ரஜினியையும் இவர்கள் கொண்டாடுவார்கள் என்றுதான் கருத்து சொல்லி இருக்கிறேன்.
அரசியலுக்கு வரட்டும்
அவரும் ஒரு இந்திய குடிமகன் என்ற முறையில் அரசியலுக்கு வந்தால், தாராளமாக வரட்டும். அவரை களத்தில் சந்திப்போம் என்கிற வகையில் எனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறேன்.
தமிழகத்தை நேசிப்பவர்
ரஜினிகாந்த் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டு ஒரு கதாநாயகராக விளங்குகிறார். அவரை கதாநாயகர் என்கிற வகையில் சூப்பர் ஸ்டாராக ஏற்று இருக்கிறார்கள். ஏறத்தாழ 45 ஆண்டுகளாக தமிழகத்தில் குறிப்பாக திரைப்பட உலகத்தின் மூலம் ஆளுமை செலுத்தி வருகிறார். அத்துடன் அவரும் இந்த தேசத்தின் ஒரு குடிமகன். தமிழை, தமிழகத்தை நேசிப்பவர், மக்களும் அவரை அப்படித்தான் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
அது அவர் உரிமை
அரசியலில் ஈடுபட யாருக்கும் உரிமை உள்ளது. யாரையும் அரசியலில் ஈடுபடக்கூடாது என்று தடுப்பது ஜனநாயக பண்பாகாது. ஆகவே அவர் வந்தால் வரட்டும் என்று கூறுகிறேன். அவ்வளவுதான்.
தமிழர் அல்லாதவர்கள் அரசியலுக்கு வரவே கூடாது என்பது அரசியல் நாகரீகமல்ல.
கொச்சைப்படுத்துவதா?
அவர் கட்சி ஆரம்பித்தால் கூட்டணி வைத்துக் கொள்ள இப்போதே அச்சாரம் போடுவதாக சிலர் சொல்வது அபத்தமானது. ஒருவரை நியாயத்தின் பக்கம் நின்று ஆதரித்தால் உடனே அரசியல் ஆதாயம் என்று கொச்சைப்படுத்துவதா...