அதிமுகவின் கடைசி பட்ஜெட் இது.... அடுத்த பட்ஜெட்டை அமமுக தாக்கல் செய்யும் - டி.டி.வி தினகரன்
அடுத்த ஆண்டு பட்ஜெட்டை நாங்கள் தான் தாக்கல் செய்வோம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மதுரை : தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்தது தான் தற்போதைய அதிமுகவின் கடைசி பட்ஜெட். அடுத்த ஆண்டு பட்ஜெட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிதியமைச்சர் தான் தாக்கல் செய்வார் என்று அந்த அமைப்பின் நிறுவனர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை மேலூரில் நடந்த கட்சி பெயர் அறிவிப்பு மற்றும் கொடி அறிமுகவிழா மாநாட்டில் நேற்று கலந்து கொண்ட ஆர்.கே நகர் சட்டசபை உறுப்பினர் டி.டி.வி தினகரன் தனது புதிய அமைப்பான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை துவங்கி கட்சி கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இன்று அவர் மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் இதுவரை எந்த மக்கள் பணியும் நடைபெறவில்லை.

மக்கள் பாதிப்பு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் இதுவரை பணிகள் தொடங்கவில்லை. பேருந்து கட்டணங்கள் 60 % உயர்த்தப்பட்டதால், கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தவிர்த்து, புதிய பேருந்துகள் வாங்க திட்டமிட்டு இருப்பதாக இந்த அரசு கூறிவருகிறது. இதன் மூலம் ஆதாயம் அடையப் போவது யார் என்று மக்களுக்குத் தெரியும்.

ஓபிஎஸ் கடைசி பட்ஜெட்
மூன்றரை லட்சம் கோடி கடன் இருக்கும் சூழலில், பெயருக்கு ஒரு பட்ஜெட்டை போட்டு அதை தாக்கல் செய்துள்ளார் பன்னீர் செல்வம். இந்த பட்ஜெட் எதற்கும் பயன்படாது. தமிழகத்தில் தற்போதைய அதிமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுதான்.

விசன் திட்டம்
அடுத்த ஆண்டு பட்ஜெட்டை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிதியமைச்சர் தான் தாக்கல் செய்வார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டமான விஷன் 2023 திட்டத்தை நாங்கள் தான் ஏற்படுத்துவோம் என்று டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக ஆட்சி அமைக்கும்
அமைப்பின் பெயரையும், கொடியையும் அறிமுகம் செய்து வைத்து பேசிய டிடிவி தினகரன், தமிழ்நாட்டில் அமமுக ஆட்சி அமைக்கும் என்று மேடையிலேயே பகிரங்கமாக அறிவித்தார். இந்த நிலையில் அடுத்த பட்ஜெட்டை நாங்கள்தான் தாக்கல் செய்வோம் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications