எந்த ஒரு சிறப்பு ரயிலும் இல்லாமல் முடிந்த இந்த வருட கோடை விடுமுறை!
நாகர்கோவில்: சிறப்பு ரயில்கள் எதுவும் இயக்கப்படாததால் கோடை விடுமுறையை கழிக்க குமரி மாவட்டத்திற்கு வந்தவர்கள் திரும்பிச் செல்ல சிரமப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள சென்னைக்கு அடுத்தபடியாக அதிக மக்கள் தொகை அடர்த்தி நிறைந்த மாவட்டம் ஆகும். குமரி மாவட்ட மக்கள் தங்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அதிக அளவில் தினசரி பயணிக்கின்றனர். குறிப்பாக திருநெல்வேலி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருச்சி போன்ற இடங்களுக்கு வேலைவாய்ப்பிற்காகவும், உயர் கல்விக்காகவும், வணிகம் தொடர்பாகவும் தினசரி ஆயிரகணக்காகவர்கள் பயணிக்கின்றனர்.

மதுரையில் உயர் நீதிமன்றம், வேலைவாய்ப்பு அலுவலகம், திருநெல்வேலியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகம், பல்கலைகழகம் மற்றும் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு தினசரி ஆயிரகணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். ஆனால் குமரி மாவட்டத்திலிருந்து திருநெல்வேலி மார்க்கம் போதிய ரயில்கள் இல்லாமல் உள்ளது என்ற குறை கடந்த 30 ஆண்டுகளாகவே உள்ளது. குமரி மாவட்ட ரயில் வழித்தடங்கள் திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் இருப்பதால் திருவனந்தபுரம் மார்க்கம் தேவைக்கு அதிகமாக அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பணிபுரியும் மற்றும் பல்வேறு இடங்களில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் என குமரி மாவட்ட பயணிகள் சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டும் இவ்வாறு அதிகப்படியான பயணிகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும், பக்கத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சொந்த ஊர்களுக்கு கோடை விடுமுறையையொட்டி வந்தனர்.
கோடை விடுமுறை முடிந்து பல்வேறு இடங்களுக்கு திரும்பி செல்வது மே மாதம் கடைசி தேதிகள் ஆகும். அதிலும் மே 30, 31, ஜுன் 1,2 தேதிகளில் அதிக அளவில் பயணம் செய்வார்கள். இந்த நாட்களில் குமரி மாவட்ட பயணிகள் வசதிக்காக கடந்த 20 ஆண்டுகளாகவே சிறப்பு ரயில்களை ரயில்வே இயக்கி வந்தது. ஆனால் தற்போது இரண்டு ஆண்டுகளாக நாகர்கோவிலை மையமாக வைத்து சிறப்பு ரயில்கள் இயக்குவதை நிறுத்திவிட்டது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயிலும் நெல்லை எனது எல்லை என்ற கூற்றின் அடிப்படையில் நெல்லையுடன் நின்றுவிட்டது.
சென்னைக்கு கூடுதல் சிறப்பு ரயில்கள்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து வீட்டுக்கு ஒரு நபர் என்ற விகிதத்தில் மக்கள் சென்னையில் பணி நிமித்தமாக வசித்து வருகின்றனர். சென்னை தமிழகத்தின் ஓர் எல்லைக்கு மிக அருகில் ஆந்திர மாநிலத்தின் வெகு பக்கத்தில் அமைந்துள்ளது. இதனால் குமரி மாவட்டங்களில் உள்ளவர்கள் தங்களின் மாநிலத்தின் தலைநகருக்கு மற்ற மாவட்டங்களை காட்டிலும் மிக அதிக தூரம் பயணம் செய்ய ஓர் இரவு முழுவதும் குறைந்தபட்சம் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் 13 மணி நேரம் பயணம் செய்து வர வேண்டும். மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களில் இன்னமும் கூடுதல் பயண நேரம் ஆகின்றது. இதனால் நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கேரளாவுக்கு என இயக்கப்பட்ட ரயில்:
கிருஷ்ணராஜபுரத்திலிருந்து நாகர்கோவிலுக்கு கேரளா வழியாக கேரளா பயணிகளுக்கு வேண்டி வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலால் குமரி மாவட்ட பயணிகளுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. இதைப் போல் மும்பையை தலைமையிடமாக கொண்ட மேற்குரயில்வே மண்டலம் காந்திதாமிலிருந்து நாகர்கோவில் வழியாக திருநெல்வேலிக்கு சிறப்பு ரயிலை அறிவித்து இயக்கிறது. ஆனால் தெற்கு ரயில்வே குமரி மாவட்ட பயணிகள் பயன்படும் படியாக திருநெல்வேலி மார்க்கம் எந்த ஒரு ரயிலையம் இயக்கவில்லை.
சிறப்பு ரயில்கள் அறிவித்து இயக்குவது முழுக்க முழுக்க ஓர் ரயில்வே மண்டலத்தின் அதிகாரத்துக்கு கீழ் வருகிறது. சிறப்பு ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே வாரியத்துக்கும், ரயில்வே அமைச்சருக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை. தெற்கு ரயில்வே அதிகாரிகள் நினைத்தால் அவர்களின் மண்டல எல்லைக்கு உள் வருகின்ற எந்த ஒரு வழித்தடத்திலும் ரயில்வே வாரியத்தின் எந்த ஒரு அனுமதியின்றி சிறப்பு ரயிலை இயக்க முடியும். ஆனால் திருவனந்தபுரம் கோட்டம் மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் குமரி மாவட்ட பயணிகள் பயன்படும்படியாக எந்த ஒரு சிறப்பு ரயிலையும் இயக்காதது குமரி மாவட்ட பயணிகள் மத்தியில் மிகுந்த ஏமாற்றமாகவே உள்ளது.
அமைச்சரின் தொகுதி:
மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலை சேர்ந்தவர். தெற்கு ரயில்வே அதிகாரிகளுக்கு இது மத்திய அமைச்சரின் தொகுதி என தெரிந்தும் எந்த ஒரு சிறப்பு ரயிலையும் அறிவித்து இயக்குவது இல்லை. இது குறித்து மத்திய அமைச்சர் உடனடியாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் அவர்களை தொடர்பு கொண்டு நாகர்கோவிலில் இருந்து புறப்படுமாறு சிறப்பு ரயில்களை அறிவித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மாவட்ட பயணிகள் எதிர்ப்பார்க்கின்றனர்.












Click it and Unblock the Notifications