கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகள் மீட்பு... தூத்துக்குடி அருகே பரபரப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடி கடலில் மிதந்து வந்த கஞ்சா மூட்டைகளைப் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே கடற்கரையில் பிளாஸ்டிக் சாக்கு மூட்டைகள் மிதந்து வந்தன. இதை பார்த்த அப்பகுதி மீனவர்கள் தாளமுத்து நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த எஸ்ஐக்கள் ஆதிலட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். மிதந்து வந்த மூட்டையை கைப்பற்றி சோதனையிட்டனர்.
அதில் 4 சிறிய பார்சல்கள் தண்ணீர் புகுதாபடி இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது. அவற்றை பிரித்து பார்த்தபோது 6 கிலோ கஞ்சா இருந்தது. அதனை கைப்பறறிய போலீசார் கஞ்சாவை கடலில் வீசி சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே பிப்ரவரி மாதம் கடலில் கஞ்சா மூட்டைகள் மிதந்து வந்தது. அதற்குள் 240 கிலோ கிராம் கஞ்சா இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் கஞ்சா மூட்டைகள் கடலில் மிதந்து வந்துள்ளது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிருந்து இலங்கைக்கு கஞ்சா மூட்டைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் வழியில் கடலோர காவல் படையினர் கண்காணிப்பு பலமாக இருந்ததால் கடத்தல்காரர்கள் இதை கடலில் மிதக்க விட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.
மேலும் கஞ்சா பார்சல் செய்யப்பட்டிருந்த பேப்பர்கள் கன்னடத்தில் எழுதப்பட்டிருந்ததால் அது கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தப்பட்டு வந்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துளளது. தொடர்ந்து இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications