ஸ்டெர்லைட் எதிர்ப்பு : பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வைகோ மீது வழக்கு!
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், அரசுக்கு எதிராக பேசியதாகவும் வைகோ மீது 3 பிரிவுகளில் தூத்துக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடந்த 28-ம் தேதியன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஸ்டெர்லைட் ஆலை குறித்து உரையாற்றினார்.
அப்போது வைகோ பேசியது, மக்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளதாகவும், பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை தூண்டும் விதமாகவும் பேசியதாக உதவி ஆய்வாளர் சண்முகசுந்தரி தென்பாகம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதன்பேரில் வைகோ மீது தற்போது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாகவும், அரசுக்கு எதிராக பேசியதாவும் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தன்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய வைகோ, பொதுக்கூட்டத்தில் பேசியதையே, நீதிமன்றத்திலும் முன்வைக்கப் போவதாக தெரிவித்தார்.