திருச்செந்தூர் கடலில் குளித்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு காலில் எலும்பு முறிவு!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள செந்திலாண்டவர் கோயில் கடற்கரையில் குளித்த 10-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வலியால் துடித்த அவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஆடிக் கிருத்திகை தினத்தையொட்டி இன்று முருகன் கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அந்த வகையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய கூடியுள்ளனர்.

நேற்றைய தினம் சுதந்திர தினம் என்பதாலும் இன்றும் நாளையும் சனி, ஞாயிறு என்பதால் தொடர் விடுமுறையால் ராமேஸ்வரம், திருவண்ணாமலை, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களில் உள்ள கோயில்களில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
அந்த வகையில் திருச்செந்தூர் செந்திலாண்டவரை தரிசிக்க வரும் பக்தர்கள் அங்குள்ள கடலில் குளித்து, நாழிக் கிணற்றிலும் குளித்துவிட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு திருச்செந்தூருக்கு இன்று வந்த ஏராளமான பக்தர்கள், கடற்கரையில் குளிக்கச் சென்றனர்.
அப்போது அங்கு சிலர் வேகமாக வந்த அலையில் சிக்கியதாக தெரிகிறது. இதனால் 10-க்கும் மேற்பட்டோருக்கு காலில் முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தனர். இதையடுத்து அங்கிருந்த போலீஸார் ஆம்புலன்ஸ் வாகனம் வரவழைத்து அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக திருச்செந்தூர் கடற்கரை அவ்வப்போது உள்வாங்கி, பாசி பிடித்த பாறைகள் வெளியே தெரியும். அது போல் கடல் உள் வாங்கும் போது உள்ளே இருந்து சுவாமி சிலைகள் அடித்துக் கொண்டு வெளியே வரும்.
ஒரு சமயம் உடல் முழுவதும் விபூதிக் கொண்ட சித்தர் ஒருவர், உள்வாங்கிய கடலில் தெரிந்த பாசி பாறையின் மீது அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அது போல் இந்த கடல் ஆழமான பகுதி என்பதாலும் அலைகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்பதாலும் அவ்வப்போது இங்கு குளிக்கும் மக்கள் கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்களும் நடைபெறும்.
அது போல் கடலில் நீரோட்டம் மாறும் போது ஜெல்லி மீன்கள் கரைக்கு வரும். அவை பக்தர்களின் உடலில் படும். அவ்வாறு தோலில் பட்டால் உடனே ஒவ்வாமை ஏற்படும். எனவே ஜெல்லி மீன்கள் வரும் போது கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்படும். இல்லாவிட்டால் பார்த்து குளிக்குமாறு போலீஸார் எச்சரிக்கை விடுப்பர்.
ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகனுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் பக்தர்கள் முருகன் கோயில்களுக்குச் சென்று முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜைகளை செய்வதுண்டு.
ஆடிக் கிருத்திகையில் முருகனை வழிபட்டால் திருமணத்தடைகள் நீங்கும். குழந்தைப் பேறு கிடைக்கும். மேலும் எல்லா நலன்களும் உண்டாகும் என்பது நம்பிக்கை. ஆடிக் கிருத்திகை, முருக பக்தர்கள் உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.
இந்த ஆண்டு ஆடி மாதம் இரு கிருத்திகை நட்சத்திரங்கள் வந்துள்ளன. ஜூலை 20, ஆகஸ்ட் 16 ஆம் தேதிகளில் ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. திருத்தணி, திருச்செந்தூர், பழனி உள்ளிட்ட கோயில்களில் ஆகஸ்ட் 16 ஆம் தேதிதான் ஆடிக் கிருத்திகை கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றத்தில் ஜூலை 20 ஆம் தேதி ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications