ஆடி அசைந்து வந்த ஸ்ரீ ரங்கம் தேர்… கோவிந்தா முழக்கமிட்ட பக்தர்கள்
திருச்சி: ஸ்ரீரங்கம் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் ஞாயிறன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீரங்கா... கோவிந்தா என்ற முழக்கத்துடன் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
108 திவ்ய தேசங்களில் முதன்மையான தலம் ஸ்ரீரங்கம். இங்கு ஆண்டு தோறும் சித்திரை திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான சித்திரை தேரோட்ட விழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நம்பெருமாள் வீதி உலா
விழா நாள்களில் நம்பெருமாள் நாள்தோறும் பல்வேறு அலங்காரங்களில் வீதியுலாவுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
கருடவாகன சேவை
கடந்த 22-ஆம் தேதி நம்பெருமாள் கருட வாகனத்திலும், 23-ஆம் தேதி அனுமந்த வாகனத்திலும், 24-ஆம் தேதி யானை வாகனத்திலும், 25-ஆம் தேதி பூந்தேரிலும், 26-ஆம் தேதி தங்கக் குதிரை வாகனத்திலும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஆண்டாள் வஸ்திரம்
சித்திரை ரேவதி பிறந்தநாளை முன்னிட்டு தேரோட்டம் நடைபெறும் 9ஆம் திருநாளில் ஸ்ரீஆண்டாள் சூடிக்களைந்த பட்டு வஸ்திரம், புடவை, கிளி உள்ளிட்டவை ரங்கநாதருக்கு சாற்றப்படுவது ஐதீகம்.இதற்காக ஸ்ரீஆண்டாளுக்கு பட்டு வஸ்திரம், புடவை, கிளி உள்ளிட்டவை வெள்ளிக்கிழமை சாற்றப்பட்டு, ஸ்ரீ ரங்கம் கொண்டுவரப்பட்டது.
திருத்தேரோட்டம்
ஞாயிற்றுக்கிழமை சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி, நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு சித்திரை தேர் மண்டபத்தை 4.15 மணிக்கு வந்தடைந்தார். திருத்தேரில் 5.15 மணிக்கு நம்பெருமாள் மீன லக்னத்தில் எழுந்தருளினார். திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி காலை 6 மணிக்கு தொடங்கியது.
கோவிந்தா முழக்கம்
பக்தர்கள், ""கோவிந்தா, கோவிந்தா'' என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து காலை 9.35 மணிக்கு நிலையை மீண்டும் வந்தடைந்தது.
துன்பங்கள் உருண்டோடும்
தேர் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.
தேரோடும் வீதிகள் அனைத்திலும் பக்தர்களுக்கு நீர், மோர், பானகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. தேரோட்டத்தை காணும் போது நம்முடைய துன்பங்கள் திருத்தேரின் காலில் சிக்கி காணாமல் போய்விடும் என்று பக்தர்கள் தெரிவித்தனர்.
நேர்த்திக்கடன்
கிராமப் பகுதிகளிலிருந்து வந்த பக்தர்கள் நம்பெருமாளுக்கு நேர்த்திக் கடனாக மாடுகளை வழங்கினர். சில பக்தர்கள் மொட்டை அடித்துக் கொண்டு தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.