தமிழகம் புதுவையில், இடி, சூறாவளியுடன் மழை - எச்சரிக்கும் வானிலை
தமிழகம் புதுச்சேரியில் இடியுடன் மழை பெய்யும் என்றும், சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.
சென்னை: வெப்பச் சலனத்தால் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் அடுத்த 48 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
அக்னி நட்சத்திர காலமாக இருந்தாலும் தமிழகம் முழுவதும் பரவலாக ஆங்காங்கே கோடை மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கரூர், திருச்சி, திருவள்ளூர், நாமக்கல், திருச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட பல நகரங்களில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கு அதிகமாகவே பதிவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் 9 செமீ மழை பெய்து வருகிறது. நெல்லை, குமரி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் தண்ணீர் பஞ்சம் தீரும் என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் பல இடங்களில் சூறாவளி காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.