3 மாதமாக “பவர் கட்” – கூல் பீர் விற்க முடியாமல் தவிக்கும் திருவள்ளூர் டாஸ்மாக்
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் அடுத்த பட்டரை கிராமத்தில் அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது.
நாள் தோறும் ரூபாய் 3 லட்சம் முதல் 4 லட்சம் ரூபாய் வரை வசூலாகும் இக்கடையில் கடந்த மூன்று மாதங்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விற்பனை குறைந்ததாக கூறப்படுகிறது.
கூலிங் "பீர்" தட்டுப்பாடு:
அதாவது கோடை காலத்தில் குடிமக்கள் அதிகம் விரும்பும் பீர் போன்ற மதுபானங்கள் மின்சாரம் இல்லாததால் பிரிட்ஜில் வைக்காமல் குளிர்ந்த நிலையில் கிடைக்காததால் யாரும் இந்த கடைக்கு வருவதில்லை.
விஷ பூச்சிகள் பயம்:
அதே போல் இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாததால் விஷ பூச்சிகள் அதிகம் உலா வருவதால் யாரும் கடைக்கு வருவதில்லை என்றும் கூறப்படுகிறது.
திருடர்கள் ஜாக்கிரதை:
மேலும், நாள் தோறும் வசூலாகும் பணத்தை இரவு நேரத்தில் எடுத்துச் செல்வதற்கோ, அல்லது கடையில் வைத்துவிட்டு செல்வதற்கு பயமாக இருப்பதாகவும் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டணம் கட்டலை:
அரசு மதுபானக் கடையோடு இணைந்து செயல்பட்டு வந்த மதுபான பார் மூடப்பட்டதால் அதன் உரிமையாளர் மின் கட்டணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.
பிரிட்ஜ் இருக்கு "நோ" பவர்:
ஒரே கட்டிடத்தில் இரண்டு இணைப்புகள் இருந்தாலும், கட்டிடத்தின் உரிமையாளர் ஒருவர் என்பதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும், அரசே குளிர்சாதனப் பெட்டி கொடுத்திருந்தும், மின் இணைப்பு இல்லாததால் அதை உபயோகப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
வழி கிடைக்குமா? :
தமிழகத்தில் மது விற்பனையை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வரும் சூழ்நிலையில் அரசு மதுபானக் கடைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதும், அதை கண்டுகொள்ளாமல் அரசு அதிகாரிகள் இருப்ப தாலும் இந்த கடையின் விற்பனை மந்தமாக உள்ளது. குறைபாடுகளை களைய அரசு அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே குடிகாரர்களின் கோரிக்கையாக உள்ளது.
விரட்டும் அதிகாரிகள்:
அதே நேரத்தில் வழக்கமான விற்பனையை விட ஒரு லட்சம் குறைவாக விற்பனையாவதாக ஊழியர்களை அதிகாரிகள் விரட்டுவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குடிக்க தண்ணியே இல்லாம மக்கள் பலர் கஷ்டப்படுகின்றனர். இதில் குடிக்க கூலிங் பீர் இல்லாமல் கடைக்கு வருவதில்லையாம் குடிகாரர்கள்.. நேரம்தான்.!