ஓபிஎஸ் முதல்வர் பதவியிழக்க காரணம் திருவண்ணாமலை கோவில் சென்டிமெண்ட்?
கோவில் சென்டிமெண்ட் ஓ.பன்னீர் செல்வத்தையும் விட்டு வைக்கவில்லை. திருவண்ணாமலை கோவிலுக்கு கலச பூஜைக்கு புனித நீர் எடுத்துச் செல்ல வெள்ளிக்குடம் கொடுத்ததே அவரது பதவியிழப்புக்கு காரணம் என்ற தகவல் பரவி வரு
சென்னை: அரசியல்வாதிகளுக்கும் கோவில்களுக்கும் ஒரு சென்டிமெண்ட் உள்ளது. தஞ்சை பெரியகோவிலுக்கு செல்ல அரசியல்வாதிகள் அஞ்சுவார்கள். காரணம் பதவியோ, உயிரோ போய்விடுமோ என்ற அச்சம்தான். அந்த வரிசையில் இப்போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயமும் இணைந்துள்ளது.
பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கு தினசரியும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பவுர்ணமி கிரிவலம் வந்து வணங்க லட்சக்கணக்கான பக்தர்கள் மாதந்தோறும் வருகை தருவார்கள்.
சித்தர்கள் வாழும் மலை என்றும், மலையே இறைவனாக காட்சி தருகிறார் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. இதனால்தான் ஆலயத்தினை சுற்றி பல்வேறு ஆசிரமங்கள் கட்டப்பட்டுள்ளன. வெளிநாடுகளில் இருந்தும் கூட ஏராளமானோர் இங்கு வந்து தங்கியுள்ளனர்.
அரசியல்வாதிகளுக்கு ஆகாதா?
பல்வேறு சிறப்புகளைப் பெற்ற திருவண்ணாமலை ஆலயம் அரசியல்வாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் ஆலயமாக மாறியுள்ளது. காரணம் சென்டிமெண்ட். 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடங்கி தற்போது பதவியிழந்த ஓ.பன்னீர் செல்வம் வரை இந்த சென்டிமெண்ட் போட்டு தாக்குகிறது என்றே கூறுகின்றனர்.
பதவி பறிபோகும்
தீப திருவிழாவிற்கு வந்து சென்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி பதவியை பறிகொடுத்து இப்போது அரசியலில் இருந்த காணாமல் போய்விட்டார். முன்னாள் அமைச்சர்கள் ஆனந்தன், கோகுல இந்திரா ஆகியோரும் கட்சிப்பதவி, அமைச்சர் பதவிகளையும் இழந்தனர்.
ஒபிஎஸ் கொடுத்த வெள்ளிக்குடம்
திருவண்ணாமலை ஆலயத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேகத்திற்கு புனித நீர் எடுத்துச்செல்ல வெள்ளிக்குடங்கள் எடுத்துக் கொடுத்தாராம் ஓ.பன்னீர் செல்வம். இதுவே அவரது பதவி பறிபோக காரணமாகிவிட்டதாக கூறுகின்றனர்.
தலை தப்பித்தவர்கள்
இந்த சென்டிமெண்ட் தெரிந்துதான் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கூர் சுப்ரமணியன் கோவிலுக்குப் போகாமலேயே தவிர்த்து விட்டார். பதவியையும் தக்க வைத்துக்கொண்டார் என்கின்றனர். திமுகவைச் சேர்ந்த ஏ.வ வேலுவும் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் போகாதவராம்.
தஞ்சாவூர் டூ திருவண்ணாமலை
தஞ்சாவூரில் உள்ள பெரியகோவில்தான் அரசியல்வாதிகளுக்கு அச்சம் தரக்கூடிய ஆலயமாக இருந்தது. அந்த வரிசையில் தற்போது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயமும் இணைந்துள்ளது. அரசியல்வாதிகள் ஆலயங்களுக்குள் அடியெடுத்து வைக்காமல் இருந்தாலே பக்தர்கள் நிம்மதியாக சாமி தரிசனம் செய்வார்கள் என்பது என்னவோ உண்மை.