"முற்பகல் செய்யின்..".. மேடையில் மல்லுக்கட்டிய திமுக திருச்சி சிவா- அமைச்சர் சின்னையா!
சென்னை: சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த விழாவில் திருச்சியைச் சேர்ந்த திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவாவுக்கும், தமிழக அமைச்சர் டிகேஎம் சின்னையாவுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோரை வைத்துக் கொண்டு இருவரும் வாதிட்டதால் மேடையில் சலசலப்பு கூடியது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 3வது அகலப் பாதை தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திருச்சி ரயில் நிலையம் தொடர்பான ஒரு பணியும் அடக்கம். இதனால் திருச்சி சிவா எம்.பியும் இதில் கலந்து கொண்டார். காணொலி காட்சி மூலமாக திருச்சி விழாவை நடத்தினர்.
மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் டிகேஎம் சின்னையா, தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அரிய காட்சி
சுரேஷ் பிரபுவுக்கு வலது புறம் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர் சின்னையா, இடது புறம் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, அந்தப் பக்கம் பாஜக தலைவர் தமிழிசை என அரசியலில் அரிய காட்சியாக இந்த விழா அமைந்தது.
ஆனா நீண்ட நேரம் நீடிக்காத ஒற்றுமை
அட பரவாயில்லையே என்று இந்தக் காட்சியை பார்த்து வந்த நிலையில் இந்த ஒற்றுமை நீண்ட நேரம் நீடிக்கவில்லை. வழக்கம் போல ஒரு வாய்ச் சண்டை வந்து சுமூ்க நிலை பறந்து போனது.
குமுறிக் கொட்டிய சிவா
விழாவில் முதலில் திருச்சி சிவா பேசும்போது தனது மனக் குமுறலைக் கொட்டினார். அவர் பேசுகையில், திருச்சி ரயில் நிலையத்தில் எனது எம்.பி நிதியில் இருந்து ரூ. 91 லட்சம் செலவில் எஸ்கலேட்டர் திறந்து வைக்கப்படுகிறது.
நான் கூப்பிட்டதால் வந்தார் சுரேஷ் பிரபு
நான் கூப்பிட்ட காரணத்தால்தான் அமைச்சர் சுரேஷ் பிரபு இந்த நிகழ்ச்சிக்கே வந்துள்ளார். திருச்சியில் நடந்திருக்க வேண்டிய விழாவை தமிழக அரசுத் தரப்பு தலையிட்டு சென்னைக்கு மாற்றியுள்ளது.
பொது மேலாளரின் திமிர் கடிதம்
சென்னைக்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டதைக் கூட எனக்கு முறைப்படி தெரிவிக்கவில்லை. என்னை திருச்சி ரயில் நிலையத்தில் உள்ள காணொலி திரைக்கு முன்பு உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்க்குமாறு கூறி கடிதம் அனுப்புகிறார் தெற்கு ரயில்வே பொது மேலாளர். இது மிகவும் வேதனையாக இருக்கிறது.
கல்வெட்டில் எனது பெயர் கூட இல்லை
இந்த திட்டத்தின் கல்வெட்டில் எம்.பி.யான எனது பெயரை குறிப்பிடாமல் நான் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளேன். ரயில்வே அதிகாரிகளும் இதைப்பற்றி யோசிக்கவில்லை.
வரக் கூடாது என்றுதான் நி்னைத்தேன்
இந்த விழாவுக்கு வரக் கூடாது என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அமைச்சர் சுரேஷ் பிரபு தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டதன் பேரில்தான் வந்தேன் என்றார் சிவா.
சின்னையாவின் சின்னபுள்ளைத்தனம்
அடுத்து பேச வந்தார் சின்னையா. திருச்சி சிவாவின் புகாரை வலுப்படுத்தும் வகையிலும் வேண்டும் என்றேதான் அவரது பெயரை இருட்டடிப்பு செய்துள்ளனர் என்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது அவரது பேச்சு. மேலும் அது நாகரீமாகவும் இல்லை.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
சின்னையா பேசுகையில், திமுக எம்.பி சிவா, தான் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பேசி உள்ளார். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என ஒரு பழமொழி உள்ளது. இதை அவருக்கு நினைவூட்டுகிறேன் என்று கூறி தனது இருக்கையில் போய் அமர்ந்தார்.
வாக்குவாதம்
இதையடுத்து அவருக்கும், சிவாவுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது. இதைப் பார்த்துக் குழம்பிய சுரேஷ் பிரபு பேச எழுந்து சென்றார். அதன் பிறகும் கூட நிற்காமல் சிவாவும், சின்னையாவும் வாதிட்டனர். அருகில் இருந்த தமிழிசை இதை சிரித்தபடி பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் வாக்குவாதம் முற்றிய நிலையில் சிவாவை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டு அவரை சமாதானப்படுத்தினார்.
காலி இருக்கைகள்
இந்த விழாவில் கூட்டமே இல்லை. பல இருக்கைகள் காலியாக கிடந்தன. ஏதோ கடனுக்கு நடத்துவது போல நடத்தினர். அதிமுக விழா என்றால் இப்படி இருந்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஆனால் மக்கள் தொடர்பான விழா என்பதால் மக்களையும் அழைத்து வர வேண்டும் என்று யாரும் அக்கறை காட்டியது போலத் தெரியவில்லை.