கட்சி தொடங்கி 3 மாதங்களிலேயே 3 கோஷ்டி; த.மா.கா பொதுச் செயலாளர் தாம்பரம் நாராயணன் கட்சிக்கு முழுக்கு!
சென்னை: ம.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.வுக்கு நிர்வாகிகள் தாவி வரும் நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தொடங்கிய 3 மாதங்களிலேயே கோஷ்டி பூசல்களால் தடுமாறத் தொடங்கிவிட்டது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தாம்பரம் நாராயணன் த.மா.கா.வில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மேலிடத்துடன் ஏற்பட்ட மோதலால் அக்கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், கடந்த ஆண்டு நவம்பரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை மீண்டும் தொடங்கினார். கடந்த மே 22-ந் தேதி மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்களை வாசன் அறிவித்தார்.

எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் மூத்த துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டனர். இது தவிர 9 துணைத் தலைவர்கள், 20 பொதுச் செயலாளர்கள், 32 செயலாளர்கள், 32 இணைச் செயலாளர்கள், 25 கொள்கை பரப்புச் செயலாளர்கள், 70 செயற்குழு உறுப்பினர்கள், 14 அணிகளின் தலைவர்கள், 75 மாவட்டத் தலைவர்கள் என 377 பேருக்கு பதவி வழங்கப்பட்டது.
அப்படியும் தங்களுக்கு பதவி கிடைக்கவில்லை என வாசனிடம் பலர் புகார் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்டத்தை 3ஆக பிரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.டி.நெடுஞ்செழியன் கடந்த ஜூலை 12-ந் தேதி த.மா.கா.வில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்தார்.
இந்நிலையில் த.மா.கா. மாநிலப் பொதுச்செயலாளர் தாம்பரம் நாராயணனும் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பாக ஜி.கே.வாசனுக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார்.
இது குறித்து தாம்பரம் நாராயணன் கூறுகையில், கட்சி ஆரம்பித்த 3 மாதங்களிலேயே த.மா.கா.வில் 3 கோஷ்டிகள் உருவாகிவிட்டன. கோவை தங்கம், ஞானசேகரன், விடியல் சேகர் ஆகியோர் மூவர் அணியாக செயல்பட்டு உழைப்பவர்களை எல்லாம் வெளியேற்றி வருகின்றனர். தமிழக வரலாற்றிலேயே 500-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் நியமித்த கட்சி த.மா.கா. மட்டுமே. கூட்டணிக்காக மற்ற கட்சிகள் தேடி வரும் நிலையில் விஜயகாந்த் கட்சி நடத்துகிறார். ஆனால், கூட்டணிக்கு ஒரு கட்சியை மட்டுமே வாசன் நம்பியிருக்கிறார் என்றார்.
தமிழகத்தில் இது தாய் கட்சிக்கு திரும்பும் காலம் போல!












Click it and Unblock the Notifications