நெருங்குகிறது தேர்தல்.... தமிழக சட்டசபை வரும் 20-ந் தேதி கூடுகிறது!
சென்னை: தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த ஆண்டின் முதலாவது கூட்டத் தொடர் வரும் 20-ந் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளது.
சட்டசபையானது ஆண்டுதோறும் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபு. இதனடிப்படையில் இந்த ஆண்டின் முதலாவது கூட்டம் வரும் 20-ந் தேதி தொடங்க உள்ளது.
இது தொடர்பாக சட்டசபை செயலாளர் ஜலாலுதீன் இன்று வெளியிட்ட அறிக்கையில், வரும் 20-ந் தேதி ஆளுநர் உரையுடன் காலை 10.30 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்க உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தல் ஆண்டு என்பதால் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரையில் நடைபெறும் ஒவ்வொரு சட்டசபை கூட்டத் தொடரிலும் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் அண்மையில் சென்னையை மூழ்கடித்த மழை வெள்ளம் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பிரதானமாக கையில் எடுத்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தலாம். இதனால் வரும் சட்டசபை கூட்டத் தொடர் பரபரப்பாக இருக்கும்.