ஸ்பெக்ட்ரம் ஊழல், நீரா ராடியா டேப், காங்கிரஸ் கூட்டணி... கருணாநிதிக்கு ஜெ. அடுக்கடுக்கான கேள்விகள்
பொள்ளாச்சி: காங்கிரஸ் ஒரு மதச்சார்பற்ற கட்சி இல்லை எனில் 9 ஆண்டுகாலம் திமுக கூட்டணி வைத்திருந்தது ஏன் என்று தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலருமான ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.
பொள்ளாச்சி மற்றும் கோயம்புத்தூர் லோக்சபா தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்த ஜெயலலிதா பேசியதாவது:

வரும் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல். காங்கிரஸ் தலைமையிலான மக்கள் விரோத மத்திய ஆட்சியை அகற்றிவிட்டு, மக்களாட்சியை நிலை நாட்டும் தேர்தல்.
மக்களை வஞ்சித்த காங்- திமுக
இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தரும் தேர்தல். காங்கிரசும், தி.மு.க.,வும் சேர்ந்து நாட்டு மக்களை வஞ்சித்துவிட்டன. அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால்தான் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த முடியும்.
கர்நாடகத்துக்கு முதலீட்டாளர்கள் போனார்களா?
தமிழகத்தில் தொழில் தொடங்க வந்த முதலீட்டாளர்கள் கர்நாடகத்தி்ற்கு சென்றுவிட்டதாக கூறினார்கள். இது குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி ஒரு தொழில் அதிபர் கூட வெளிமாநிலங்களுக்கு தொழில் தொடங்க செல்லவில்லை . ஆனால் தி.மு.க.,வினர்தான் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
எங்கள் ஆட்சி காலத்தில்..
எனது ஆட்சி காலத்தில் 31 ஆயிரத்து 706 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 660 கோடியில் முதலீடு கிடைத்துள்ளது. 10 ஆயிரம் பேருக்கும் மேலான வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளோம். தென் தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் அ.தி.மு.க, ஆட்சி காலத்தில் பெருகியுள்ளது.
திமுக ஆட்சியில்..
தி.மு.க,. ஆட்சியில் 26 ஆயிரத்து 122 தொழில் நிறுவனங்கள் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் 40 ஆயிரத்திற்கும் மேலாக பெருகியுள்ளது. தி.மு.க., ஆட்சியில் 1 லட்சத்து, 78 ஆயிரத்து 160 சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் பதியப்பட்பட்டுள்ளன. ஆனால் அ.தி.மு.க., ஆட்சியில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 218 சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் பதியப்பட்டுள்ளன.
மின்வெட்டு இல்லா தமிழகம்
விரைவில் தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மின்மிகை மாநிலமாக மாறும் என்று உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்பெக்ட்ரம் தான் காரணம்
மத்திய அமைச்சரவையில் இருந்து தி.மு.க. விலக ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையே காரணம். ஆனால் இலங்கை பிரச்சனையை முன்வைத்து விலகியதாக பொய் பிரசாரம் செய்கின்றனர்.
கலைஞர் டிவிக்கு பணம்
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அவரது குடும்ப தொலைக்காட்சிக்கு ரூ 214 கோடி வந்தது. இது எப்படி வந்தது ? ஏன் அவசரமாக திருப்பி கொடுக்கப்பட்டது ? இது குறித்து கருணாநிதி பதில் அளிக்க தயாரா ? நேர்மை தவறாத உத்தமர் போல் கருணாநிதி பேசி வருகிறார். அவரது இந்த ஏமாற்று வேலையெல்லாம் யாரும் நம்ப தயாராக இல்லை.
நீரா ராடியா டேப்
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நீரா ராடியாவுடனான தொலைபேசி உரையாடல்கள் குறித்து விளக்கம் கொடுக்க கருணாநிதி தயாரா?
9 ஆண்டு கால கூட்டணி ஏன்?
காங்கிரஸ் கட்சி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்று சொன்னால் 9 ஆண்டுகாலம் திமுக ஏன் அக்கட்சியுடன் கூட்டணி வைத்தது என்று கருணாநிதி விளக்குவாரா?
இவ்வாறு ஜெயலலிதா அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.












Click it and Unblock the Notifications