மீண்டும் மேகதாது.. ஜப்பானிலிருந்து சென்னை வந்தவுடன் பேசிய ஸ்டாலின்! பற்ற வைத்த டிகே சிவகுமார்
சென்னை: மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை திரும்பிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இதுகுறித்து பேசி உள்ளார்.
சென்னையில் 2024 ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையிலும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணம் மேற்கொண்டார்.

ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் முதலமைச்சர் ஸ்டாலின் 9 நாள் பயணம் நிறைவடைந்ததை அடுத்து தலைநகர் டோக்கியோவில் இருந்து அவர் புறப்பட்டார். சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், நேற்று இரவு 10 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை தமிழக அமைச்சர்கள், திமுக எம்பி, எம்.எல்.ஏக்கள், திமுக மூத்த நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலினிடம், மேகதாது அணை கட்டப்படும் என்று கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் தெரிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்த அவர், "இது தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கமாக பதில் அளித்திருக்கிறார். அதை நானும் படித்து பார்த்தேன். அதில் நாங்கள் உறுதியாக இருப்போம்." என்று தெரிவித்தார்.
கர்நாடக துணை முதலமைச்சராக அண்மையில் பதவியேற்ற டிகே சிவகுமார், தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வரும் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார். அவரது பேச்சுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் குறிப்பிட்டு உள்ளதாவது, "கா்நாடக தோ்தலில் வெற்றி பெற்ற டி.கே.சிவகுமாருக்கு இந்த அறிக்கை வாயிலாக வாழ்த்துகள். துணை முதல்வராக அவா் பதவிப் பிரமாணம் எடுத்த சில நாள்களுக்கு உள்ளாகவே அண்டை மாநிலத்தை உரசிப் பாா்க்கும் காரியத்தைச் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது.

மேக்கேதாட்டு அணை பற்றிய முழு விவரத்தை அதிகாரிகள் இன்னும் அவருக்குச் சொல்லியிருக்க மாட்டாா்கள். காவிரிப் பிரச்சனையைத் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட காவிரி நடுவா் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்புகளில் மேக்கேதாட்டு பற்றி குறிப்பிடப்படவில்லை. மேக்கேதாட்டுவில் அணையோ அல்லது அனுமதிக்கப்படாத கட்டுமானங்களோ தமிழ்நாட்டின் நலனைப் பாதிக்கும்.
எனவே, தமிழ்நாட்டுக்கு உரிமையுள்ள, கட்டுப்பாடற்ற நீா்ப்பிடிப்புப் பகுதியான மேக்கேதாட்டுவில் அணை கட்டுவோம் என்று அவா் கூறுவது ஏற்புடையதல்ல. கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட திட்டமிடுவதை தமிழ்நாடு அனைத்து நிலைகளிலும் எதிா்க்கும். டி.கே.சிவகுமாரை விரைவில் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது இந்த பிரச்னையை பற்றி, அவரிடம் விரிவாக பேசுவேன்." என்று அமைச்சர் தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications