1 மணி நேரத்தை தாண்டிய பேச்சு.. முனிவர் கதை.. தென்காசி விழாவை பிரச்சார மேடையாக மாற்றிய முதல்வர்!
தென்காசி மாவட்ட தொடக்க விழாவை முதல்வர் பழனிசாமி உள்ளாட்சி தேர்தல் பிரச்சார மேடையாக மாற்றி தீவிரமாக பேசினார்.
தென்காசி: தென்காசி மாவட்ட தொடக்க விழாவை முதல்வர் பழனிசாமி உள்ளாட்சி தேர்தல் பிரச்சார மேடையாக மாற்றி தீவிரமாக பேசினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக குட்டி குட்டி கதைகளை சொல்லி, அவர் நீண்ட நேரம் பேசினார்.
நெல்லையில் இருந்து புதியதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று நேரில் தொடங்கி வைத்தார். இதையடுத்து தென்காசியில் மக்கள் முன்னிலையில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
இன்னும் ஒரு மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழக அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் பழனிசாமி இதில் பேசினார்.

நிறைவேறிய வாக்குறுதி
முதல்வர் தனது பேச்சில் அதிமுக கொடுத்த வாக்குறுதியை எல்லாம் நிறைவேற்றி வருகிறது. நாங்கள் கொடுக்காத வாக்குறுதியையும் நிறைவேற்றி வருகிறது. குறைதீர்ப்பு முகாம்கள் மூலம் மக்களின் கோரிக்கையை பெற்று வருகிறோம். குறைதீர்ப்பு முகாம்களில் வாங்கப்பட்ட மனுக்களில் பல லட்சம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.

குளங்கள் எப்படி
தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும். இங்கு செண்பகவல்லி அணைக்கட்டு பிரச்னையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியின் கீழ் காவிரி , வைகை என்று எல்லா அணைகளிலும் நீர் நிரம்பி செல்கிறது. அதிமுக அரசின் சீரிய முயற்சிதான் இதற்கு காரணம்.

மத்திய அரசு திட்டங்களை
தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம். மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம். பாஜகவுடன் கூட்டணி வைத்து 5 மாதத்தில் 6 மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

ஒரு கதை
நான் இங்கு ஒரு கதை சொல்ல விரும்புகிறேன். ஒரு பாவம் செய்த நபர் முன்னொரு காலத்தில் முனிவர் ஒருவரை சந்திக்க சென்றார். முனிவரிடம் நான் பாவம் செய்துவிட்டேன் ஐயா, எனக்கு மன்னிப்பு வேண்டும் என்று கேட்டார். அதற்கு அந்த முனிவர் எந்த பாவம் நீ செய்தாய் என்று கேட்டார். அதற்கு அந்த நபர் நான் ஒருவரை பற்றி பொய்யான அவதூறு பரப்பிவிட்டேன் என்று கூறினார்.

பஞ்சு கதை
இதற்கு அந்த முனிவர் நீ வீட்டிற்கு போ, உன் வீட்டில் உள்ள தலையணையில் உள்ள பஞ்சுகளை வீட்டிற்கு வெளியே வீசிவிட்டு நாளை வா என்று குறிப்பிட்டார். அந்த நபரும் அதேபோல் செய்துவிட்டு மறுநாள் முனிவரை சந்திக்க வந்தார். அப்போது அந்த முனிவர், காற்றில் பறந்த பஞ்சுகளை எல்லாம் இங்கே மொத்தமாக ஒன்று விடாமல் கொண்டு வா என்று குறிப்பிட்டார்.

எப்படி முடியும்
அதற்கு அந்த நபர், பஞ்சுகள் காற்றில் சென்றுவிட்டது எப்படி அனைத்தையும் கொண்டு வருவது என்று கூறினார். அதற்கு முனிவர், காற்றில் பறந்த பஞ்சை எப்படி கொண்டு வர முடியாதோ, அப்படித்தான் நீ பேசிய அவதூறுகளையும் யாரும் மீட்டு கொண்டு வர முடியாது. அதனால் உனக்கு மன்னிப்பு கிடையாது என்று அந்த முனிவர் கூறினார்.

ஸ்டாலின் அவதூறு
அதேபோல்தான் அதிமுக அரசு மீது ஸ்டாலின் அவதூறு பரப்பி வருகிறார். நாங்கள் நன்றாக ஆட்சி செய்வது அவருக்கு பிடிக்கவில்லை. அவருக்கு எங்கள் கூட்டணியின் ஒற்றுமை பயமாக இருக்கிறது. அவர் அரசியலில் தனித்துவிடப்பட்டுவிட்டார்.

மன்னிப்பு இல்லை
எங்கள் மீது அவதூறு பரப்பும் அவருக்கு எப்போதும் மன்னிப்பு கிடையாது. மக்கள் அவரை எப்போதும் மன்னிக்க மாட்டார்கள். அவரின் பொய்களுக்கு எல்லாம் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications