கொடநாடு கொள்ளை விவகாரம்.. போலீசாரை பாராட்டிய முதல்வர்!
கொடநாடு கொள்ளை விவகாரத்தில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி பாராட்டியுள்ளார்.
சென்னை : கொடநாடு பங்களாவில் கொள்ளையடிக்க முயன்றவர்கள் விரைவிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைந்தது. அப்போது திமுக எம்எல்ஏ அன்பழகம் கொடநாடு கொள்ளை விவகாரத்தில் போலீசார் செயல்பட்ட விதம் குறித்து கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் பழனிசாமி கொடநாடு கொள்ளை விவகாரம் குறித்து 7 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
சிறப்பான காவல்துறை
எடப்பாடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜ் செய்த கூட்டுச் சதியாலேயே கொள்ளை சம்பவம் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டதால் விரைவிலேயே குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த விவகாரத்தை பொறுத்தம்ட்டில் காவல்தறை சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று பாராட்டினார்.
புயலைக் கிளப்பிய கொள்ளை
கொடநாடு பங்களாவில் கைக்கடிகாரம், அலங்காரப் பொருட்கள் மட்டுமே கொள்ளை போயுள்ளது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் மறைந்த ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் பாதுகாவலர்கள் கொள்ளைச் சம்பவம் தமிழக சட்டம் ஒழுங்கு நிலையை மிகவும் விமர்சனத்திற்கு ஆளாக்கியது.
கணக்கு காட்டிய போலீஸ்
கொடநாடு பங்களாவில் என்ன பொருட்கள் இருந்தது அதில் என்ன பொருள் கொள்ளை போனது என்று யாருக்குமே தெரியாது. இந்நிலையில் கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார், 7 பேரை கைது செய்து விட்டோம் என்று கணக்கு காட்டப்பட்டது. அதோடு பங்களாவில் இருந்து ஜெயலலிதாவின் கைக்கடிகாரங்கள், அலங்காரப் பொருட்கள் என்று புகைப்படங்களும் வெளியிடப்பட்டது.
பாராட்டிய முதல்வர்
கனகராஜுடன் கூட்டுச் சதி செய்ததாக பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சயானும் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை மற்றும் கொள்ளைக்கு வேறு காரணங்கள் இருக்கும் என்று பலர் தரப்பிலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் முதல்வர் இன்று சட்டசபையில் கோடநாடு கொலை வழக்கு விசாரணையில் காவல்துறை சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பாராட்டுப் பத்திரம் அளித்துள்ளார்.