பாம்பாற்றின் குறுக்கே கேரளா தடுப்பணைக்கு எதிர்ப்பு- பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்
சென்னை: பாம்பாற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
பாம்பாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்ட கடந்த வாரம் கேரளா முதல்வர் உம்மன்சாண்டி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார். கேரளாவின் மறையூர் பட்டிசேரி என்ற இடத்தில் இந்த புதிய தட்டுப்பணை கட்டப்படுகிறது.
இது குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
காவிரியின் கிளை நதியான அமராவதிக்கு வரும் பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு அணைக் கட்ட திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளன.
இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் அமராவதி அணையை நம்பியிருக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கேரளாவின் இந்த முயற்சி, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை மீறும் செயல்.
இதனால் பாம்பாற்றின் குறுக்கே அணைக் கட்டக்கூடாது என கேரள அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான தகவல்களை சமர்பிக்க கேரளாவை வலியுறுத்த வேண்டும்.
மேலும் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்குமுறை குழு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.