தமிழகத்தில் ஒரு எம்எல்ஏகூட இல்லாமல் பாஜக ஆட்சி நடத்துகிறது- திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
ஒரு எம்எல்ஏகூட இல்லாமல் பாஜக தமிழகத்தில் ஆட்சி நடத்துகிறது என்று திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video

தாராபுரம்: தமிழகத்தில் ஒரு எம்எல்ஏக்கூட பாஜகவுக்கு இல்லை. ஆனால் மறைமுகமாக ஆட்சி நடத்துகிறது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஆளுநர் ஆய்வு நடத்துவது, மக்களின் எதிர்ப்பை மீறி செயல்படுத்தப்படும் எட்டு வழிச்சாலை உள்ளிட்டவற்றை பாஜக தொடங்கும் பட்சத்தில் அதற்கு ஆளும் கட்சி எதிர்ப்பு தெரிவப்பதே இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
இந்நிலையில் தாராபுரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் பேசினார்.

வேலையின்மை
அப்போது அவர் கூறுகையில் சிறுபான்மை மக்களை மட்டும் அல்ல இந்துக்களையும் ஏமாற்றி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை அளிப்பதாகவும், வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் போடுவதாகவும் பல வாக்குறுதிகளை தந்து ஏமாற்றியவர் பிரதமர் மோடி.

கோமாவில் தமிழக அரசு
ஜெயலலிதா என்று மருத்துவமனையில் படுத்தாரோ அன்றிலிருந்து தமிழக அரசும் கோமாவில் படுத்துவிட்டது. சில மாநிலங்களில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்களை வைத்து கொண்டும், கட்சிகளை உடைத்தும் பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது.

காங்கிரஸ் தலைமை
ஆனால் தமிழகத்தில் மட்டும் எம்.எல்.ஏக்களே இல்லாமல் பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அதில் காங்கிரஸ் தலைமை ஏற்றால்தான் பா.ஜ.க.வை வீழ்த்த முடியும்.

உள்ளாட்சி தேர்தல்
தமிழ்நாட்டில் காங்கிரஸை ஒதுக்கிவிட்டு யாரும் ஆட்சி அமைக்க முடியாது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாததால் எந்த திட்டப் பணிகளும் மக்களுக்கு சென்றடைவதில்லை. எனவே உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றார் திருநாவுக்கரசர்.












Click it and Unblock the Notifications