தேர்தல் தோல்விக்காக காங். தலைவர் ஞானதேசிகன் பதவி விலக சிதம்பரம் கோஷ்டி கோரிக்கை
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு பொறுப்பேற்று மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் என்று ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டது. கூட்டணிக்கு கட்சிகள் கிடைக்காத நிலையில் தமிழகம், புதுவையில் போட்டியிட்ட காங்கிரசுக்கு ஒரு சீட்டும் கிடைக்கவில்லை. மேலும் தொகுதிக்கு ஒரு லட்சம் வாக்குகள் வாங்குவதற்கே திண்டாடியது. பல இடங்களில் காங். வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
தோல்வி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், அகில இந்திய அளவில் காங்கிரசுக்கு எதிரான அலை இருந்தது. அதுதான் தமிழகத்திலும் பிரதிபலித்துள்ளதே தவிர, தமிழகத்தில் மட்டும் காங்கிரசுக்கு தோல்வி கிடைக்கவில்லை என்று கூறிவிட்டு கூலாகிவிட்டார்.
ஆனால் சும்மாவே வாயை மெல்லும் காங்கிரசார் அவல் கிடைத்தால் விடுவார்களா? இதோ.. ஆரம்பித்துவிட்டார்கள் அறிக்கை போரை. ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் சிலர் தங்களது பெயரை குறிப்பிட்டே, இன்று, பத்திரிகை அலுவலகங்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். அந்த அறிக்கையில், தமிழகத்தில் காங்கிரஸ் படுதோல்வியடைந்த பிறகும் அதன் தலைவர் பொறுப்பில் ஞானதேசிகம் இருக்கிறார். உடனடியாக அவர் பதவி விலக வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது. இதையறிந்த ஞானதேசிகன் ஆதரவாளர்கள் கோபமடைந்துள்ளனர்.
ப.சிதம்பரம் கர்நாடகா மூலம், எப்படி ராஜ்யசபாவுக்கு போகப்போகிறார் என்று பார்த்துவிடுவோம் என்று அவர்கள் முஷ்டியை முறுக்குகிறார்கள். கர்நாடகாவில் இருந்து எப்படியும் சிதம்பரத்தை ராஜ்யசபாவுக்கு அனுப்பிவிடக்கூடாது என்பதில் உள்குத்து வேலைகளில் அந்த கோஷ்டி இறங்கியுள்ளதாம். தோற்ற பிறகும் கோஷ்டி தகராறு காங்கிரசில் நிற்கவில்லை என்பதை இச்சம்பவங்கள் காண்பிக்கின்றன.












Click it and Unblock the Notifications