தமிழக போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு ம.பியில் தப்பிய தீவிரவாதி: 6 போலீசார் சஸ்பெண்ட்
சென்னை: வெடி குண்டு மிரட்டல் வழக்கில் தொடர்புடைய வடமாநில கைதியை லக்னோ நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்ற போது, அவர் தமிழக போலீசாரை ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைதியை தப்பவிட்ட 6 காவலர்களை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
திரிபுரா மாநிலம் தலியார் கந்தி பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரி சையத் அஹ்மது அலி. இவரது மனைவி லுக்பா பேகம். கடந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தார். இவர், உத்தரப்பிரதேச மாநில போலீசாரால் தேடப்படும் நபர் என வேலூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அவர் ஆக்ராவின் தாஜ்மகால், அலிகார், லக்னோ, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் குண்டு வெடிக்கும் என்று செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தவர் என்பது தெரியவந்தது. இதற்கிடையில், சிகிச்சைக்காக வந்த இடத்தில் சிஎம்சி மருத்துவமனைக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
ஆம்பூரில் மதரஸாவில் தங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு உள்ளதா? என்று விசாரித்தனர். அதில், விரக்தியின் காரணமாகவே அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இல்லை என்றும் உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில், வேறு ஒரு வெடிகுண்டு மிரட்டல் வழக்கு தொடர்பாக லக்னோ நீதிமன்றத்தில் சையத் அஹ்மத் அலியை ஆஜர்படுத்த வேலூர் ஆயுதப்படை உதவி ஆய்வாளர் லூர்துசாமி, போலீசார் சந்திர சேகர், நாகராஜ், விநாயகமூர்த்தி, செல்வகுமார், யுவராஜ், சுரேஷ் குமார் ஆகியோர் கடந்த 19ம் தேதி ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் அழைத்துச் சென்றனர்.
மத்தியப்பிரதேச மாநிலம் இட்டார்சி ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு 11 மணியளவில் சிறிதுநேரம் ரயில் நின்றது. அங்கு வந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீசார், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்வதாகக் கூறி தமிழ்நாடு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, ரயில் புறப்பட்ட நேரத்தில் போலீசாரை ஏமாற்றிவிட்டு ஓடும் ரயிலில் இருந்து சையத் அஹ்மது அலி குதித்து தப்பினார்.
அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை போலீசார் நிறுத்தினர். சையத் அஹ்மது அலி தப்பியது குறித்து இட்டார்சி ரயில்வே போலீசில் உதவி ஆய்வாளர் லூர்துசாமி புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ரயில் நிலையத்தின் பல பகுதிகளில் சையத் அஹ்மதுவிடன் படத்தை போலீசார் ஒட்டினர்.
மத்தியப்பிரதேச மாநில போலீசார், உத்திரபிரதேச மாநில போலீசார், ரயில்வே போலீசாருடன் இணைந்து வேலூர் போலீசாரும் தப்பி ஓடிய சையத் அஹ்மதுவை தேடி வருகின்றனர். கைதியை தப்பவிட்ட சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸாரிடம் விளக்கம் கேட்கப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கைதியை தப்பிக்க விட்ட ஆறு போலீசார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications