பாலாற்றில் தடுப்பணை- தமிழக கோவில் கபளீகரம்... ஆந்திராவுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தால் பதற்றம்!
வேலூர்: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திராவுக்கு எதிராக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு வரும் 4 வழித்தடங்களிலும் போக்குவரத்து முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாலாற்றில் உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான கனகநாச்சியம்மன் கோவிலையும் ஆந்திரா அரசு கைப்பற்றியுள்ளதாகவும் விவசாயிகள் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியான புல்லூரி கிராமத்தில் பாலாற்றின் கரையோரத்தில் கனகநாச்சியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை புல்லூர், திம்மாம்பேட்டை, ஆவாரங்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பராமரித்து வருகின்றனர்.
இது தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கியும் வருகிறது. இக் கோவிலுக்கு வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர், ஆம்பூர் மற்றும் ஆந்திர மாநில பகுதியில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

தடுப்பணை உயரம் அதிகரிப்பு
கோவிலுக்கு அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் தடுப்பணை கட்டியது. அதன்பிறகு 5 அடியாக தடுப்பு சுவராக எழுப்பி தண்ணீரை தேக்கியது. தற்போது சுமார் ரூ.45 லட்சம் மதிப்பில் 10 அடிக்கும் மேலாக தடுப்பு சுவர் எழுப்பி கடந்த சில நாட்களாக ஆந்திர அரசு பணியை மேற்கொண்டு வருகிறது.

எதிர்ப்பு இதற்காக...
ஆந்திர எல்லையில் இருந்து தமிழக எல்லைக்குள் நுழையும் பாலாற்றில் வழிந்தோடும் நீரை நம்பி தமிழக பகுதியில் சுமார் 2,000 ஏக்கர் அளவிலான விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது தடுப்பு சுவர் 10 அடிக்கும் மேலாக உயர்த்தப்பட்டால் பாலாற்றில் வழிந்தோடும் தண்ணீரும் நின்றுவிடும் என்பதுதான் தமிழக விவசாயிகள் எதிர்ப்புக்குக் காரணம்.

ஆந்திரா கபளீகரம்
பாலாற்றின் நடுவில் கனகநாச்சியம்மன் கோவில் அமைந்துள்ளதால் தற்போது எழுப்பியுள்ள தடுப்பு சுவரால் திடீரென வெள்ளம் வந்தால் கோவில் தண்ணீரில் மூழ்கும் அபாயமும் ஏற்படும். கோவிலுக்கு சொந்தமான பகுதியை ஆந்திரா ஆக்கிரமித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

4 வழித்தடத்திலும் போராட்டம்
இதனால் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் ஆந்திராவுக்கு வாணியம்பாடி அருகே புல்லூரில் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரும் 4 வழிதடங்களிலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 4 வழித்தடங்களிலும் சாலையில் மரங்களை வெட்டி சாய்த்து போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
விவசாயிகளின் போராட்டம் காரணமாக தமிழகத்துக்கு வரும் ஆந்திர பேருந்துகள் அனைத்தும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம்- ஆந்திரா எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications