சூரப்பா நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை... திரைப்பட இயக்குநர்கள் ஆளுநருடன் சந்திப்பு!
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்யக் கோரி தமிழ் திரைப்பட இயக்குநர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
Recommended Video
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கன்னடர் சூரப்பா நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் திரைப்பட இயக்குநர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து இது தொடர்பான மனுவையும் அவர்கள் அளித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கன்னடர் சூரப்பா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் செயல்படும் உயர்கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பா நியமனம் செய்யப்பட்டதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் சூரப்பாவின் நியமனம் சட்ட விதிகளின் படியே நடந்ததாக கடந்த சனிக்கிழமை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விளக்கம் அளித்தார்.
இதனிடையே தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் விதமாக தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பாரதிராஜா தலைமையில் இயக்குநர்கள் செல்வமணி, அமீர், வெற்றிமாறன், கவுதமன், தங்கர்பச்சான், நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் இந்தப் பேரவையில் உள்ளனர்.
திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, வெற்றிமாறன், கவுதமன், அமீர் உள்ளிட்டோர் சென்னை ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தனர். அப்போது சூரப்பா நியமனத்தை திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை மனு கொடுத்ததாக தெரிகிறது.