இலங்கை கடற்படை அட்டூழியம்... கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு!
கோடியக்கரை அருகே மீன் பிடித்துகொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கடுமையாக தாக்கி விரட்டியடித்துள்ளது.
நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படை கடுமையாக தாக்கி விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேதாரண்யத்தைச் சேர்ந்த மீனவர்கள் பைபர் படகு ஒன்றில் செவ்வாய்கிழமை இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். புதன்கிழமை மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவில் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, மீனவர்களை சுற்றிவளைத்து கட்டை, கம்பிகளை கொண்டு கடுமையாக தாக்கு விரட்டியடித்தது.
இதில் ஆர்க்காட்டுதுறை சேர்ந்த செந்தில், குமாரசாமி,அமுதகுமார், கலைமணி ஆகியோர் படுகாயமடைந்தனர். மீனவர்கள் படுகாயங்களுடன் நேற்று இரவு கரை திரும்பினர்.
காயமடைந்தவர்களுக்கு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை மனிதாபிமானம் இல்லாமல் நடத்தக்கூடாது என்று கடந்த வாரம் இந்தியா வந்த பிரதம் ரனில் விக்கிரம சிங்கேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு நடந்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்து தாக்குதலை நடத்தி இருப்பது தமிழக மீனவர்களை கொதிப்படைய செய்துள்ளது.