பேச்சுவார்த்தையில் தோல்வி வருத்தமளிக்கிறது... ஊர் திரும்பிய தமிழக மீனவர்கள் சோகம்
சென்னை: இலங்கையில் நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த சோகத்தில் சென்னை திரும்பியுள்ளனர் தமிழக மீனவர்கள் குழு.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப் படுவதும், கைது செய்யப் படுவதும் தொடர்கதையாகி வருகிறது. மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்களின் வலைகளை கிழித்தெறிவது, படகுகளை பறிமுதல் செய்வது என இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் தொடர்கிறது.
இந்த பிரச்சனைக்கு தீர்வு காண கடந்த ஜனவரி மாதம் சென்னையில் இந்தியா- இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதம் மீண்டும் பேச்சுவார்த்தை நடப்பதாக இருந்தது. ஆனால், சிலப்பல காரணங்களால் அது இரு முறை தள்ளிப்போனது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இலங்கை தலைநகர் கொழும்பில் இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 17 மீனவ பிரதிநிதிகள் மற்றும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் என இந்தியா சார்பில் மொத்தம் 26 பேர் கலந்து கொண்டனர். இலங்கை சார்பில் அதிகாரிகள், மீனவ பிரதிநிதிகள் என 30 பேர் கலந்து கொண்டனர்.
சுமார் 10 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் தமிழக மீனவர்களின் கோரிக்கைகளை, இலங்கை மீனவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேநேரம், இலங்கை மீனவர்களும் தங்கள் கோரிக்கையில் இருந்து இறங்கிவரவில்லை. இதனால், பேச்சுவார்த்தையில் முடிவு ஏதும் எட்டப்படாமலேயே முதல் நாள் கூட்டம் முடிந்தது.
இதனால், நேற்று 2வது நாளாக நடைபெற இருந்த பேச்சுவார்த்தையை தமிழக மீனவர்கள் புறக்கணித்தனர்.
அதன் பின், போதை பொருள் கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 3 ஆண்டுகளாக இலங்கை சிறையில் வாடி வரும் தங்கச்சிமடம் பகுதி மீனவர்கள் கில்டஸ், பிரகாஷ் உள்ளிட்ட 5 மீனவர்களை தமிழக மீனவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினார்கள். இதை தொடர்ந்து இன்று அதிகாலை கொழும்பில் இருந்து புறப்பட்ட தமிழக மீனவர்கள அதிகாலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.
இலங்கையில் நடந்த பேச்சுவார்த்தை குறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய புதுவை மீனவர் பேரவை தலைவர் இளங்கோ, ''தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வரும் சர்வதேச கடல் எல்லை பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை மீனவர்கள் ஏற்றுக்கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாதது வருத்தமாக உள்ளது" எனத் தெரிவித்தார்.
இன்று சென்னையில் உள்ள மாநில அதிகாரிகளுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்திய பின்னர் மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப முடிவெடுத்துள்ளனர்.