காவிரி விவகாரத்தில் மத்திய அரசை விட, தமிழக அரசே மக்களுக்கு அதிக துரோகம் இழைத்துள்ளது: அன்புமணி
காவிரி விவகாரத்தில் மத்திய அரசை விட, தமிழக அரசே தமிழ் மக்களுக்கு அதிக துரோகம் இழைத்துள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசை விட தமிழக அரசே தமிழ்நாட்டிற்கும், தமிழ் மக்களும் அதிக துரோகம் இழைத்துள்ளது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வார காலக்கெடு முடிவடைந்த நிலையில், மத்திய அரசு அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் காவிரி வழக்கில் வழங்கிய தீர்ப்பில் சந்தேகம் கேட்டு மத்திய அரசு தற்போது மனுத்தாக்கல் செய்துள்ளது.
இந்த விவகாரத்தால் தமிழக எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் மத்திய மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இது காவிரி மேலாண்மை வாரியம் அமைவதை தடுக்கும் முயற்சி என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து பாமகவின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான தீர்ப்பில் விளக்கம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.
அதே நேரம், காவிரி பிரச்சினை தொடர்பான விஷயத்தில் தமிழகத்திற்கு மத்திய அரசும், கர்நாடகமும் செய்ய நினைக்கும் துரோகத்தை விட, பெரிய துரோகத்தை தமிழகத்திற்கு இழைக்க அதிமுக தலைமையிலான தமிழக அரசு துடிக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் தேவையான அழுத்தத்தைத் தர தமிழக அரசு தவறிவிட்டது.
காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பைச் செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் நாட்டு மக்களிடையே சலசலப்பு ஏற்படும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது.
இதுவரை கர்நாடக அரசு கூறிவந்த காரணத்தை கர்நாடகத்தின் குரலாக மாறி மத்திய அரசு ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. இதிலிருந்தே மத்திய அரசு யாருக்காக செயல்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். மத்திய அரசின் மனுவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வலுவான வாதங்களை முன்வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications