அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு? ஊதிய விகிதங்களை மாற்ற ஐவர் குழு அமைத்தது தமிழக அரசு
தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 7வது ஊதியக் குழு அடிப்படையில் இந்தக் குழு ஊதிய உயர்வை பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி கடந்த 3 நாட்களாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
திருத்திய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் போன்றவை குறித்து இந்தக் குழு ஆய்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர், உள்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட 5 பேர் இடம் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது ஊதியக் குழு அடிப்படையில் ஊதிய உயர்வை இந்தக் குழு பரிந்துரைக்கும் என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 மாதத்துக்குள் இந்தக்குழு தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
கடந்த திங்கள் கிழமை முதல்வராக தலைமைச் செயலகத்தில் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, கர்ப்பிணி பெண்களுக்கான உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களில் கையெழுத்திட்டு அறிவிப்புகளை வெளியிட்டார். நேற்று விவசாயிகளுக்கு 2247 கோடி ரூபாய் வறட்சி நிவாரணம் அறிவித்தார். இந்நிலையில் அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தும் வகையில் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.