தருமபுர ஆதீனம் வந்த ஆளுநர் ரவிக்கு ஒரு பக்கம் கறுப்புக்கொடி...மறுபக்கம் பூரண கும்ப மரியாதை
தருமபுர ஆதீனத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை: தருமபுர ஆதீன மடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆதின மடம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கறுப்புக்கொடி காட்ட முயற்சி செய்த 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தனது மனைவி லட்சுமியுடன் கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் வாயிலில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் மேள, தாளங்கள் முழங்க மாலை வழங்கி கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் தரிசனம் முடிந்த பிறகு கவர்னருக்கு தீட்சிதர்கள் பிரசாதங்கள் வழங்கினர். இதையடுத்து கோயிலுக்குள் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதிக்கு சென்ற ஆளுநர் ரவி அங்கும் சாமி தரிசனம் செய்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பழகுவதற்கு இனியவர் ஆளுநர் ரவி! தனிப்பட்ட முறையில் ஆளுநருடன் மோதல் இல்லை! சட்டசபையில் முதல்வர் பேச்சு
தருமபுரம் ஆதீன மடத்தில் விழா
தெலங்கானா மாநிலத்தில் நடைபெறவுள்ள புஷ்கர விழாவில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொன்மைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் இன்று ஞானரத யாத்திரை புறப்பட உள்ளார். இந்த யாத்திரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடக்கி வைக்க வருகை புரிந்தார்.
ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு
ஆளுநரின் வருகைக்கு திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் உரிமை இயக்கம், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை உள்ளிட்ட 18 மசோதாக்களும், தீர்மானங்களும் முடக்கப்பட்டுள்ளன. ஆர்எஸ்எஸ் சிந்தனையைப் போற்றுகிற ஒரு ஆளுநரை ஆதீன நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லது அல்ல என்றும் தெரிவித்தனர்.
கறுப்புக்கொடி காட்டிய 150 பேர் கைது
இன்றைய தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு எதிராக மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்திய 150 பேர் கைது செய்யப்பட்டனர். தி.க, திராவிடர் விடுதலை கழகம், வி.சி.க, கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். வேனை வைத்து மறித்து கறுப்பு கொடி காட்ட விடாமல் தடுத்தனர். இதனையடுத்து ஆளுநரின் கார் கடந்து சென்றது. இதனையடுத்து ஆத்திரத்தில் கறுப்புக்கொடியை சாலைகளில் வீசினர். அதனை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
பாஜக வரவேற்பு
ஆளுநருக்கு எதிரான போராட்டத்திற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரான போராட்டத்தை இந்து மதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கிறோம். ஆளுநரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டால், மாநிலம் முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் பல்லாயிக்கணக்கானோர் திரண்டு ஆளுநரை வரவேற்போம் என்று பாஜகவினர் கூறியிருந்தனர். அதன்படி வேஷ்டி சட்டையில் கம்பீரமாக வந்திறங்கிய ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பூரண கும்ப மரியாதை
தருமபுர ஆதீனத்தின் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். அதனை எடுத்து தருமபுர ஆதீனத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் திறந்து வைத்தார். கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதினம் மடாதிபதி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று பேசினார்கள். தொடர்ந்து தர்மபுர ஆதீனம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள புஷ்கரம் விழாவில் பங்கேற்பதற்காக யாத்திரையை ஆளுநர் துவக்கி வைத்தார். ஆளுநர் வருகையை முன்னிட்டு 1850 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.