காவிரி விவகாரத்தில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் தமிழக அரசு!
காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக என்ன என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
சென்னை: காவிரி விவகாரத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக உறுதியான முடிவை எடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது. சட்டசபையில் நிறைவேற்றிய சிறப்பு தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பிவைத்தனர். மேலும் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் அமளியில் ஈடுப்பட்டாலும் மத்திய அரசு இதுவரை உறுதியான அறிவிப்பை தெரிவிக்கவில்லை.
நிர்வாக ரீதியில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையிலும், நடவடிக்கை எடுக்காத சூழலில் இறுதி நாளில் என்ன முடிவு எடுக்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஒரு மணி நேரம் அவசர ஆலோசனை நடத்தினார். அதன் பின் அமைச்சர்களுடன் தனியாக ஒரு மணி நேரம் முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
அதிகாரிகளை பொறுத்த வரை சட்ட ரீதியான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளலாம் என்றும் இதன் மூலம் மத்திய அரசுக்கு அரசியல் ரீதியான அழுத்தம் தரலாம் என்ற நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
அரசியல் ரீதியான அழுத்தத்தை அதிமுக அரசு கொடுக்க வில்லை என்றால் அது பெரிய சிக்கலை உருவாக்கும் என்று அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ஒருமித்த முடிவை எடுக்க முடியாமல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திணறி வருகிறார். மத்திய அரசு அறிவிப்பு வெளியிடும் வரை அதாவது கெடு முடியும் நேரமான மாலை வரை காத்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர்.
எது எப்படியே மத்திய அரசை எதிர்ப்பது போலவும் இருக்க வேண்டும், எதிர்க்காதது போலவும் இருக்க வேண்டும் என்பதுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நிலைப்பாடாக உள்ளது.