சூப்பரப்பு.. விலையில்லா ஆடு போட்ட 5 குட்டி.. கரூரில்!
கரூர்: கரூர் அருகே தமிழக அரசு வழங்கிய விலையில்லா ஆடு ஒன்று ஐந்து குட்டிகளைப் போட்டுள்ளது. இதை ஊரே திரண்டு வந்து பார்த்து குஷியடைந்தது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த சின்னதாராபுரம் பெரியார் நகரில் வசிப்பவர் அருக்காணி. இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழக அரசால் ஒரு ஜோடி விலையில்லா வெள்ளாடுகள் வழங்கப்பட்டன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த பெண் ஆடு எட்டு குட்டிகளை இதுவரை ஈன்றுள்ளது. இந்த நிலையில் அது மீண்டும் கர்ப்பமானது. இந்தப் பிரசவத்தில் அது ஐந்து குட்டிகளை ஈன்றது. வெள்ளாடுகள் பொதுவாக அதிகபட்சமாக நான்கு குட்டிகள் வரை தான் ஈன்றெடுக்கும். ஆனால், அருக்காணி ஆடு ஐந்துகுட்டிகள் ஈன்றதால் மக்கள் வியப்படைந்தனர்.
இதையடுத்து அருக்காணியின் ஆட்டைப் பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் திரண்டு வந்து, அடியாத்தி என்று ஆச்சரியத்துடன் அது ஈன்ற ஆட்டு குட்டிகளை பார்த்து செல்கின்றனர். ஒரே பிரசவத்தில் ஒரு ஆடு 5 குட்டிகளை ஈன்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.