'ஆபரேசன்' சசிகலா புஷ்பா... அடுத்த அரெஸ்ட் டார்கெட் 'அண்ணாச்சி' வைகுண்டராஜன்?
சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து தூக்கியடிக்கப்பட்டு வருகின்றனர்... தற்போது சசிகலா புஷ்பாவை இயக்குவதாக கூறப்படும் 'காட்ஃபாதர்' தொழிலதிபர் வைகுண்டராஜனை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாகவே கூறப்படுகிறது.
அதிமுகவில் ஜெயலலிதாவின் உத்தரவை மதிக்காதவர்கள் கதி என்ன என்பது நாடறியும். இருந்தபோதும் ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்ய உத்தரவிட்ட பின்னர், ஜெயலலிதா என்னை அடித்தார் என பகிரங்க புகார் கூறினார் சசிகலா புஷ்பா.

ராஜ்யசபாவில் இப்படி புகார் தெரிவித்துடன் ஜெயலலிதா உத்தரவுப்படி ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய முடியாது என அடம்பிடித்து வருகிறார் சசிகலா புஷ்பா. அவரது இந்த துணிச்சலுக்குப் பின்னர் இருப்பது தொழிலதிபர் வைகுண்டராஜன்தான் என தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. அவரால்தான் சசிகலா புஷ்பா அரசியலில் ஏற்றம் கண்டார்..
கடந்த 2013-ம் ஆண்டு வைகுண்டராஜனின் தாது மணல் தொழிலுக்கு தடை விதித்தது தமிழக அரசு. இதற்கு பழிவாங்கும் வகையில் ஜெயலலிதாவை அவமானப்படுத்த சசிகலா புஷ்பாவை ஏவிவிடுகிறார் வைகுண்டராஜன் என்பதும் தொடர் குற்றச்சாட்டு.
இதனால் சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள், உறவினர்கள் பலரும் அதிமுக பொறுப்புகளில் இருந்து தூக்கியடிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், மாவட்ட செயலர்களை வளைக்கவும் பெருந் தொகை கொடுத்து வைகுண்டராஜன் தரப்பு முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவை முழுவதும் தம்முடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் வைகுண்டராஜன்; அடுத்தது தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களையும் அவர் கபளீகரம் செய்ய முயற்சிக்கிறார் என உளவுத்துறை தகவல்கள் அதிமுக மேலிடத்துக்குப் போனது. சசிகலா புஷ்பாவுக்கு ஆதரவாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை 3 மாவட்ட அதிமுக நிர்வாகிகளை கணிசமாக வளைத்து போட்டு ஜெயலலிதாவுடன் மல்லுக்கட்ட ப்ளான் போட்டிருக்கிறாராம் வைகுண்டராஜன்.
அதுவும் சசிகலா புஷ்பா நாளை மதுரை நீதிமன்றத்தில் ஆஜராகும் போது அவருக்கு போலீசார் குடைச்சல் கொடுத்தால் அதிமுகவில் கலகக் குரல் வெடிக்க வைக்க வேண்டும் என்பதும் வைகுண்டராஜனின் திட்டமாக கூறப்படுகிறது.
இதற்கு செக் வைக்கும் வகையில்தான் தற்போது வைகுண்டராஜனின் சகோதரர் குமரேசன் களமிறக்கப்பட்டுள்ளாராம். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குமரேசன், வைகுண்டராஜனின் சட்டவிரோத தாது மணல் மூலம் தமிழக அரசுக்கு ரூ10,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது; வைகுண்டராஜனின் சொத்துகளை முடக்க வேண்டும் என ஏகத்துக்கும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
"ஏதாவது காய்நகர்த்தினால் எந்த நேரத்திலும் நடவடிக்கை பாயும்.. சிறைக்குத்தான் போக வேண்டும் என்ற அரசின் எச்சரிக்கையாகவே" குமரேசனின் பேட்டியை பார்க்க வேண்டும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications