ஜெ. போயஸ்கார்டன் இல்லம் அரசுடமையாக்கப்படுகிறது? தீவிர ஆலோசனையில் அதிகாரிகள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லம் தமிழக அரசால் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவரின் நினைவிடமாக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரின் போயஸ்கார்டன் இல்லம் தமிழக அரசால் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அதன்பிறகு அது ஜெயலலிதாவின் நினைவிடமாக்கப்படும் என்றும் அ.தி.மு.கவினர் தெரிவிக்கிறார்கள்.
வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 100 கோடி ரூபாயை நீதிமன்றம் அபராதமாக விதித்தது. அதுபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ.10 கோடி அபராதம் விதித்தது.
அபராதம் கட்ட தவறினால் அவர்களது சொத்துகளை பறிமுதல் செய்யவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் தொடர்புடைய 128 சொத்துகளை முடக்கி வைத்துள்ளனர். அந்தச் சொத்துகளில் 68 சொத்துகளைப் பறிமுதல் செய்து அரசுடமை ஆக்கும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலாவுக்குச் சொந்தமான அந்த 68 சொத்துகளும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவாரூர், தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ளன. அந்தச் சொத்துகளைத் தமிழ்நாடு வருவாய் மீட்பு சட்டத்தின்படி பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடங்கின பறிமுதல் பணிகள்
அதன் பேரில் ஜெயலலிதா, சசிகலாவுக்கு உரிய குறிப்பிட்ட சொத்துகளை கையகப்படுத்த 6 மாவட்ட கலெக்டர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகளை, தனி அதிகாரிகளாக நியமனம் செய்து 68 சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் பணிகள் தொடங்கியுள்ளன.

அரசுக்குச் சொந்தமான இடங்கள்
ஆறு மாவட்டங்களிலும் விரைவில் இந்த பணி செய்து முடிக்கப்படும் என்று தெரிகிறது. அதன் பிறகு அந்த இடங்களில் ' இது அரசுக்கு சொந்தமான இடம் 'என்ற போர்டு வைக்கப்படும். அப்போதுதான் ஜெயலலிதா, சசிகலாவின் எந்தெந்த சொத்துகள் அரசுடமையாகின்றன என்பது தெரியவரும்.

ஜூன் இறுதிக்குள் அரசுடமை
68 சொத்துகளை அரசுடமையாக்கும் நடவடிக்கைகளை இந்த மாதம் (ஜூன்) இறுதிக்குள் நடத்தி முடித்து விட வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. எனவே 6 மாவட்ட ஆட்சியர்களும் இதில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர்.

அரசுத்துறைகளுக்கு ஒதுக்கப்படும்
இந்த 68 சொத்துகளில் கணிசமானவற்றை அரசு துறைகளுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. மீதமுள்ளதை ஏலத்தில் விட்டு விடுவார்கள் என்று வருவாய் துறையினர் சொல்கிறார்கள். இது பற்றிய இறுதி முடிவை தமிழக அரசு எடுக்கும்.

ஜெ.சசிகலா நகை பறிமுதல்
அந்த பணமும் அபராத தொகையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாவிட்டால், ஜெயலலிதா, சசிகலாவின் நகைகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நகைகள் ரிசர்வ் வங்கி அல்லது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவிடம் விற்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

ஜெ. வாரிசுகளுக்கு உரிமை
போயஸ்கார்டன் வீடு உள்பட ஜெயலலிதா பெயரில் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள சொத்துகளுக்கு அவரது வாரிசுகள் மட்டுமே உரிமை கொண்டாட முடியும். அதாவது ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா இருவரும் அதற்கு உரிமை கோர முடியும்.

தமிழக அரசு பறிமுதல்
வாரிசுகள் சட்டப்படி உரிமை கோராவிட்டாலோ அல்லது அதில் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ, அந்த சொத்துகளை மாநில அரசு பறி முதல் செய்ய முடியும். அந்த வகையில் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடும் தமிழக அரசால் பறிமுதல் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

போயஸ் இல்லம் ஜெ. நினைவகம்
ஜெயலலிதாவின் சொத்துகளில் பெரும்பாலானவை அரசுடமை ஆகும் நிலையில் அவர் வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக அரசு அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மிக விரைவில் ஜெயலலிதா இல்லம் அவரின் நினைவகம் ஆக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது என்கிறார்கள் தலைமைச் செயலக வட்டாரத்தில்.












Click it and Unblock the Notifications